சென்னை

காவிரி நீரை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

தமிழ்நாட்டுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடாததால் தமிழ்நாட்டில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.   இது குறித்து கர்நாடக முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுக்க தமிழக அரசு தீர்மானித்து கர்னாடக முதல்வரிடம் நேரம் கேட்டது.   ஆனால் கர்னாடக அரசு நேரம் ஒதுக்காததோடு தன்ணீர் தரவும் மறுத்து விட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில், “யார் ஆட்சியில் இருந்தாலும் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் உச்சநீதி மன்ற தீர்ப்பை மதித்தாக வேண்டும்.   உச்சநீதிமன்ற உத்தரவின் படி தமிழ்நாட்டுக்கு சட்டரீதியாக தர வேண்டிய காவிரி நீரை திறந்து விட வேண்டும்.

இது கட்சிக்குள்ளே பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னை இல்லை.   மாநிலத்துக்கு மாநிலம்  பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னை.  இந்த 50 ஆண்டுகால பிரச்னையை இருமாநில அரசுகளும் பேசி தீர்க்க வேண்டும்.   மாநில அரசு பேச்சுவார்த்தைப் படி நீர் திறந்து விடவில்லை என்றால் மத்திய அரசு,  பிரதமர், நதி நீர் வாரியங்கள்,  நீர்ப் பங்கீடு அமைப்புக்கள் ஆகியவை மூலம் வலியுறுத்தி நீரைப் பெற வேண்டும்” என கூறி உள்ளார்