தமிழ்நாட்டை தன் கட்டுக்குள் கொண்டுவர மோடி சதி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு நேற்று வெள்ளிக்கிழமையுடன் 4 ஆண்டுகள் ஆட்சியை பூர்த்தி செய்தது. இன்று 5வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன், மத்திய பாஜக ஆட்சி அந்தக் கட்சியினர் உட்பட அனைத்து தரப்பிலும் விமர்சிக்கப்பட்டுகிறது என்று தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் என்று சாடிய அவர்,  தூத்துக்குடி, துப்பாக்கிச் சூட்டில் மத்திய அரசின் தலையீடு இருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

“தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். தூத்துக்குடியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை விலக்க வேண்டும்” என்றும் திருமாவளவன்  வலியறுத்தினார்.