திருக்கரம்பனூர் உத்தமர் கோயில்.

ஸ்ரீ பூர்ணவல்லித் தாயார்ஸமேத ஸ்ரீ புஜங்கசயன புருஷோத்தமப் பெருமாள் கோவில், திருக்கரம்பனூர் திவ்யதேசம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

உத்தமர் கோயில் திருச்சி கோட்டை இரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர்கள் தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் தொலைவிலும் உள்ள, மும்மூர்த்திகளும் குடி கொண்ட, 108 வைஷ்ணவத் திவ்ய தேசங்களுள் மூன்றாவது திருத்தலம்.

பெயர்ச்சிறப்பு :-

மும்மூர்த்திகளையும் தன்னிடத்தே கொண்டுள்ள இத்திருத்தலம் பல சிறப்புப் பெயர்களையும் கொண்டுள்ளது.

கடம்ப மரங்கள் அதிகமிருந்தமையால், கடம்பனூர் என வழங்கப்பெற்று பிறகு அது கரம்பனூர் எனவும், திருக்கரம்பனூர் எனவும் ஆனது என்பர்.

இதுவே வடமொழியில் நீப க்ஷேத்திரம் என்றானது.

புருஷோத்தமர் எழுந்தருளியுள்ள திருத்தலமானதால், உத்தமர் கோயில் எனப் புகழ் பெற்றது.

சிவபெருமான் திருவோடேந்தி பிக்ஷை கேட்ட திருக்கோலத்தில் எழுந்தருளியமையால், பிக்ஷாடனர் கோயில் எனலாயிற்று.

மும்மூர்த்திகளும் காட்சியளிக்கும் காரணத்தால் மும்மூர்த்தி க்ஷேத்திரம் எனவும் இது வழங்கப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்புகள் :-

பல மன்னர்களும் இத்தலத்திற்கு கொடையளித்ததாக இங்குக் காணப்படும் குறிப்புகள் வெளியிடுகின்றன. இவர்களுள் சோழ மன்னன் கேசரி வர்மனும், பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியனும் அடங்குவர்.

முற்காலத்தில் இத்திருத்தலம் கதவுகளே அற்று இருந்ததாகவும், அதனால் எந்நேரமும் இறைவனைத் தொழுதிட இயன்றிருந்தது எனவும் பெரியவாசன் பிள்ளையின் குறிப்பொன்று கூறுகிறது.

சந்நதிகள் :-

பெருமாள் சந்நதி, தாயார் சந்நதி, சிவன் சந்நதி, பார்வதி சந்நதி, ப்ரம்மா சந்நதி, சரஸ்வதி சந்நதி

ஸ்தல வரலாறு :-

இத்தலத்திற்குப் பல வரலாறுகள் உள்ளன.

ஆதிப்ரம்ம புராணத்திலேயே இக்கோயில் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

தம்மிடம் மிக்க பக்தி செலுத்தி வரும் ப்ரம்மாவைச் சோதிக்க விஷ்ணு கடம்ப மரமாக உருவெடுத்து இங்கு வந்ததாகவும், அவ்வுருவிலும் ப்ரம்மா அவரை அறிந்து கொண்டு தொடர்ந்து வழிபட்டமையால், மனம் மகிழ்ந்த மஹாவிஷ்ணு அவருக்கு இங்கு தனி வழிபாட்டு சந்நிதி கொள்ளுமாறு செய்ததாகவும் கூறுவர்.

இந்தியாவில் மிகச் சில இடங்களிலேயே ப்ரம்மா மற்றும் சரஸ்வதி ஆகியோருக்கு தனிக் கோயில்களோ, சந்நதிகளோ உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோயிலில், சிவன் பிக்ஷாடனாராக உருக்கொண்டமைக்கும் ஒரு வரலாறு உள்ளது.

சிவபெருமான் பிரம்மனுடைய ஒரு தலையைக் கிள்ளி எறியவும், ப்ரம்ம ஹத்தி தோஷம் வந்ததால், சிவனின் கையிலிருந்த கபாலம் அவரது கையோடு ஒட்டிக் கொண்டதாகவும், சிவன் கையில் ஒட்டிக் கொண்ட கபாலத்தில் மஹாலக்ஷமியைக் கொண்டு பிக்ஷையிடச் செய்ததால் அச்சாபம் நீங்கியதாகவும் கூறுவதுண்டு.

ஸ்தலச் சிறப்புகள் :-

சிவன், பார்வதி, ப்ரம்மா, சரஸ்வதி என அனைவருக்கும் இங்கே தனிச் சன்னதிகள் உள்ளன.

பிக்ஷாடண மூர்த்தியாக சிவன் காட்சியளிப்பதால் பிக்ஷாண்டார் கோயில் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

திருமங்கையாழ்வார், கதம்ப மகரிஷி, உபரிஸ்ரவஸ், சனகர், சனந்தனர், சனத்குமாரர், முதலியவர்களுக்கு அரும் காட்சி தந்தருளிய பெருமான் இவர்.

அப்பர், சுந்தரர் மற்றும் திருஞான சம்பந்தர் ஆகிய நாயன்மார்கள் இத்தலம் பற்றிப் பதிகம் பாடியுள்ளனர்.

மதுரை மெய்ப்பாத புராணிகர் இயற்றிய ஸ்தல வரலாறினையும் இது கொண்டுள்ளதாகக் கூறுவர். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்றாகும்.

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வித்த திருக்கோவில்.