திருச்செந்தூர்

னமழை வெள்ளம் காரணமாகத் திருச்செந்தூரில் அனைத்த் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு தனித்தீவாக மாறி உள்ளது.

தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. குறிப்பாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதி கன மழை பெய்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. இங்கு  மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டினத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 93.2 செ.மீட்டர் அதி கனமழை பெய்துள்ளது. அடுத்தபடியாக திருச்செந்தூரில் 67.9 செ.மீ மழை மற்றும் ஸ்ரீ வைகுண்டத்தில் 61.8 செ.மீ மழை பெய்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாகத் திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையேயான சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களின் அடிப்பகுதியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து திருச்செந்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாகச் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி உள்ளனர். இணைய சேவை, தொலைத் தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் வெளியுலக தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு திருச்செந்தூர் தனித்தீவாக மாறியுள்ளது.