சென்னை

நாளை டில்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்கத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே சென்னையில் மிக்ஜம் புயலின் தாக்கத்தால் பெருமழை கொட்டியதால், நகரம் வெள்ளத்தில் மிதந்தது. இந்த வெள்ளம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றது.

தென்மாவட்டங்களில் தற்போது ல் அதி கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நகரின் பல இடங்களில் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் நிற்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இன்னும் 2 நாட்களுக்குக் கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அங்கு வெள்ள மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச முதல்வர் மு.க ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார்.  அவர் வெள்ள பாதிப்புகள் தொடர்பாக நிவாரண நிதி வழங்கிடப் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாகத் தெரிகிறது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இன்று டில்லி செல்கிறார். அப்போது பிரதமரை நேரில் சந்திக்க நேரம் கேட்டு மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.