சென்னை:
சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டீனாக இருந்த ஜெயந்தி மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதால் அவருக்கு பதிலாக சென்னை மருத்துவக் கல்லூரியின் டீனாக தீரனிராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் பிறப்பித்தார்.

சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டீனாக இருந்தவர் ஜெயந்தி. இந்த மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவர்கள், முதுநிலை மாணவர்கள் உள்பட 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து டீன் ஜெயந்தியும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள கடந்த 14-ஆம் தேதி முதல் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக தெரிகிறது. இவர் ஏன் விடுப்பில் சென்றார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை. பொத்தாம் பொதுவாக இவர் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார் என்றே அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் புதிய டீனாக நாராயணசாமி நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் சென்னை மருத்துவக் கல்லூரி டீனாக தீரனிராஜனை சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் நியமித்தார்.