“ஒரு டிக்கெட்டிலிருந்து விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் தரப்படும் “என்கிற விஷாலின் அறிவிப்புக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர பத்திரி்கையாளர்கள் சந்திப்பு இன்று மாலை 5மணியளவில்  தேனாம்பேட்டை யில் உள்ள சங்க அலுவலகமான டி.ஆர். மாளிகையில் நடைபெற்றது.

அப்போது காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் P கண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசினார் .அவர் பேசும் போது

“நான் விஷால் பேசியதைத் தொலைக்காட்சி ஊடகங்களில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

ஒரு டிக்கெட்டிலிருந்து ஒரு ரூபாய் என்று அறிவிப்பு செய்து இருக்கிற விஷாலுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

விஷால் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருக்கிறார். இப்போது அவர் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பொறுப்புக்கு வந்திருக்கிறார்.

அவர், தான் சம்பந்தப்பட்ட சங்கம் சார்ந்து பேசினால் பிரச்சினை இல்லை. ஆனால் எங்கள் சங்கம் தொடர்பாக அறிவிப்பு செய்ய அவர் யார்? அவருக்கு என்ன உரிமை இருக்கிறது?

அவருக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கும் என்ன சம்பந்தம்? அவர் ஒன்று செய்யலாம் .அவர் விவசாயிகளுக்காக சம்பளமே வாங்காமல் ஒரு படம் நடித்துக் கொடுக்கலாம்.

நடிகர் சங்கத்தைக் கூட்டி எல்லா நடிகர்களும் தங்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் குறைத்து அதை விவசாயிகளுக்கு வழங்கலாம். தயாரிப்பாளர் சங்கத்தைக் கூட்டியும் இப்படி ஏதாவது வழங்கலாம்.

ஆனால் எங்களை இதில் சம்பந்தப் படுத்துவது ஏன்? வருகிற படங்களில் 99% படங்கள் லாபமில்லை. இந்நிலையில் தம்பி விஷால் ஒன்றும் புரியாமல் இப்படிச் சொல்வது சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது. இது அவருக்கு இது பற்றித் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது.
அவருக்கு அனுபவம் இல்லை. அப்படி என்றால் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.

இப்படி எதுவும் புரியாமல் குழப்படி செய்யக் கூடாது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசக்கூடாது.

இது பற்றி விஷாலோடு ஊடகங்களிலோ அல்லது எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.