திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர்  ஆடி ஆசை வருகிறது. இதைக்காண நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் திருவாருரில் கூடியுள்ளனர. ஏராளமானோர் தேரின் வடத்தை  இழுத்து, தியாகராஜரின் ஆசி பெற்று செல்கின்றனர்.

கடந்த ஆண்டு (2020) கொரோனா தொற்று பொதுமுடக்கம காரணமாக ஆழித் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு ‘விழாவில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். 10 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேரோட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம்’  என்பது உள்பட பல கட்டுப்பாடுகளுடன் தேரோட்டம்  நடைபெற்று வருகிறது.

ஆசியாவின் பிரம்மாண்டமான தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் இன்று காலை திட்டமிட்டபடி தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகள்  தேரின்  வடத்தை பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.  இந்த ஆண்டு விசேஷமாக பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இந்நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. இது 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இன்று தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு,  நேற்று மாலை தியாகராஜர் ஆழித் தேரில் எழுந்தருளினார். இன்று காலை விநாயகர், சுப்பிரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் அதிகாலை5 மணி அளவில் வடம் பிடிக்கப்பட்டன. தொடர்ந்து 7:30 மணி அளவில் ஆழித்தேர் வடம் பிடிக்கப்பட்டது. தமிழகம் முழுவதிலும் இருந்து திரண்டுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

பக்தர்களின் விண்ணை முட்டும் ஆரூரா, தியாகேசா கோசத்துடன் ஆழித்தோர் ஆடி அசைந்தாடி ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இன்று பிற்பகல் தேர் நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆழித் தேரோட்டத்தை ஒட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாளை ஆழித்தேரோட்டம்: திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…