சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் இனி காணொலி காட்சி மூலமாக மட்டுமே நடைபெறும் என்று நீதிமன்றத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மே 3 ஆம் தேதி வரை நீதிமன்றப் பணிகள் எதுவும் நடைபெறாது என்றும் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் நீதிமன்றங்களுக்கான மே மாத விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் ஊழியர் ஒருவரும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, நீதிமன்றம் முழுவதும் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நீதிமன்ற வளாகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு தற்போது சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, ஊரடங்கு முடியும் வரை அவசர வழக்குகள் காணொலி மூலமாக மட்டுமே விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.