தேனி:

மிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், தர்மயுத்தம் வெற்றி பெற்றதாக கூறினார்.

ஜெ.மறைவை தொடர்ந்து முதல்வராக பதவி ஏற்ற ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவின் மிரட்டல் காரணமாகவும், அரசில் சசிகலா குடும்பத்தினரின் தலையீடு காரணமாகவும் சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்.

இதன் காரணமாக அவரிடம் இருந்து முதல்வர் பதவி பறிக்கப்பட்டு, அந்த பதவியை பிடிக்க சசிகலா திட்டம் தீட்டினார்.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து  கடந்த ஆண்டு இதே நாளில், ஜெ.சமாதியில் தியானம் இருந்து, சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தத்தில் ஈடுபடப்போவதாக களமிறங்கினார்.

அவருக்கு எதிராக 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள், இன்னாள் கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், ஓபிஎஸ்சின் தர்ம யுத்தம் நாடு  முழுவதும பரபரப்பை ஏற்படுத்தி, அனைத்து மீடியாக்களிலும் டிரென்டாக பேசப்பட்டது.

இந்நிலையில், தனது சொந்த ஊரான  பெரியகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தி யாளர்களின் தர்மயுத்தம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த துணை முதல்வர்,  சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு, பிரிந்த அணிகள் இணைந்துள்ள நிலையில், தனது தர்மயுத்தத்தின் நோக்கம் நிறைவேறியிருப்பதாக  கூறினார்.

மேலும், தேனி பகுதியில்  நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்தை செயல்படுத்துவதால் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் அந்த திட்டம் வராது என்றும் கூறினார்.