சென்னை: காவிரி நீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டத்தை  செயல்படுத்த முயற்சிக்கிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்து உள்ளார். இந்த திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட திட்டம் என்றும் கூறினார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து இன்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது,  சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் நடைபெற்றது. இதில் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் குடிநீர் வழங்கல் வாரிய உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில், சென்னையின் குடிநீர் தேவை, கோடை காலங்களில் குடிநீர் தேவையை சமாளிப்பது, மற்றும்குடிநீர் குழாய்களில் நேரடியாக மின் மோட்டார் பொறுத்தப்பட்ட இணைப்பைக் கண்டறிந்து துண்டிப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு,  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் குடிநீர் வாரிய அனைத்து பணிமனை பொறியாளர்களும் குடிநீரின் தரம் மற்றும் குடிநீர் கட்டமைப்புகளை பரிசோதிக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு, சென்னை மாநகரின் மொத்த குடிநீர் தேவை 1150 எம்எல்டி, அதில் 240 முதல் 250 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது , மீதமுள்ள குடிநீரை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. லாரிகளில் குடிநீரை விநியோகம் செய்வதை முழுவதுமாக நிறுத்தி குழாய்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நிலத்தடி நீரின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதனை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். சென்னையில் 8.60 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு சரி செய்யப்பட்டுள்ளது

குடிநீர் பற்றாக்குறையை போக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்த உள்ளோம் என்று கூறியவர், காவிரி ஆற்றில் செல்லும் மிகை நீரை,  சென்னைக்கு கொண்டு வரும் திட்டத்தை  செயல்படுத்த முயற்சிக்கிறோம் என்றார்ல.

இந்த திட்டம் ஏற்கனவே, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட திட்டம், அதை செயல்படுத்துவது தொடர்பாக முயற்சித்துவருகிறது. இது நடைமுறைக்கு வருவதற்கு 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.