சென்னை: மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயில் சேவை, கோயம்பேடு-பட்டாபிராம் இடையே நீட்டிக்கப்பட உள்ளது. இதுதொடர்பான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் கோயம்பேடு முதல் பட்டாபிராம் இடையே 19 ஸ்டேஷன்கள் உடன் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்குவது குறித்து திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோயம்பேடு முதல் பட்டாபிராம் (வெளிவட்டச் சாலை) வரை மெட்ரோ இரயில் போக்குவரத்து அமைப்பை நீட்டிப்பதன் பரிந்துரைக்கான விரிவான திட்ட அறிக்கையை (Detailed Project Report) தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர். கே. கோபால், இ.ஆ.ப., அவர்களிடம், அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான திரு. மு.அ.சித்திக், இ.ஆ.ப., அவர்கள் 21.02.2025 சென்னை தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தார்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு.தி.அர்ச்சுனன், மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். முன்மொழியப்பட்ட மெட்ரோ வழித்தடம், தற்போதுள்ள கோயம்பேடு மெட்ரோ நிலையத்தில் தொடங்கி, பாடிபுதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லை வாயல், ஆவடி வழியாகச் சென்று பட்டாபிராமில்(Outer Ring Road – வெளிவட்டச் சாலையில்) முடிவடைகிறது,
இது அம்பத்தூர் எஸ்டேட் மற்றும் அம்பத்தூர் OT, ஆவடி இரயில் நிலையம், பேருந்து முனையம் மற்றும் வெளிவட்டச் சாலை (ORR) போன்ற போக்குவரத்து மையங்களுக்கு தடையற்ற இணைப்பை வழங்கும். திட்ட செலவு மற்றும் செயல்படுத்தும் நேரத்தை மேம்படுத்துவதற்காக இது மூன்று இடங்களில் (அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து பணிமனை சந்திப்பு, டன்லப் அருகே, ஆவடி பேருந்து நிலையத்திற்கு முன்னால்) நெடுஞ்சாலை மேம்பாலத்துடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.
விரிவான திட்ட அறிக்கையின் (DPR) முக்கிய அம்சங்கள்: • வழித்தடத்தின் மொத்த நீளம்: 21.76 கி.மீ • உயர்த்தப்பட்ட நிலையங்களின் எண்ணிக்கை: 19 • மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு: ரூ. 9,744 கோடி. (மூன்று மேம்பாலச் சாலை ஒருங்கிணைப்பு உட்பட)” /
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.