சென்னை: மகா சிவராத்திரியையொட்டி, தமிழ்நாட்டுக்கு வருகை தரும் குடியரசு தலைவர் முதன்முறையாக, மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, கோவை செல்கிறார். அன்று இரவு கோவை  ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி மதுரை, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளன. மேலும் பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வரும் 18ந்தேதி மகா சிவராத்திரியன்று  காலை குடியரசு தலைவர் முர்மு  டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம்  மதுரை வருவதாக தகவல்  வெளியாகி உள்ளது. விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பகல் 12.15 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய செல்கிறார். அங்கிருந்து மீண்டும் மதுரை விமான நிலையம் வரும் அவர், கோவைக்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கு ஈஷாவில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார்.

கோவை பூண்டி அருகேயுள்ள ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா வரும் 18-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி சிலை முன்பு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

மாலை 6 மணிக்கு ஈஷா யோகா மையத்துக்கு வரும் குடியரசுத் தலைவரை, ஈஷா நிறுவனர் சத்குரு வரவேற்கிறார். பின்னர், ஈஷா வளாகத்தில் உள்ள லிங்க பைரவி உள்ளிட்ட ஆலயங்களை அவர் பார்வையிடுகிறார். தொடர்ந்து, ஆதியோகி சிலை முன்பு நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் விழாவில் பங்கேற்க உள்ளதாக ஈஷா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மஹா சிவராத்திரி விழா தொடர்பாக ஈஷா அறக்கட்டளை நேற்று வெளியிட்ட அறிக்கையில் ,‘‘ஈஷா நிறுவனர் சத்குரு முன்னிலை யில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழா தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் தொடங்குகிறது. லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, உள்நிலையில் பரவசத்தில் ஆழ்த்தும் சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரத பாரம்பரியத்தை பறைசாற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் விழா விடிய விடிய நடைபெற உள்ளது. மஹாசிவராத்திரி இரவில் இருக்கும் கோள்களின் அமைப்பு, மனித உடலில் இயற்கையாகவே சக்தியை மேல் நோக்கி எழ செய்வதற்கு ஏதுவாக உள்ளது. எனவே, இந்த இரவில் ஒருவர் முதுகுதண்டை நேராக வைத்திருந்து விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் இருந்தால் ஆன்மிகம் சார்ந்த மகத்தான பலன்களை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், குடியரசு தலைவராக  பொறுப்பேற்ற பிறகு, திரெளபதி முர்மு முதன்முறையாக தமிழ்நாடு வருகிறார்.  அவருக்கு மதுரை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் உள்பட அதிகாரிகள் வரவேற்பு அளிப்பார்கள் என தெரிகிறது.   மதுரை மீனாட்சியை தரிசித்துவிட்டு, இரவு ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

முன்னதா ஈஷா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, திரெளபதி முர்மு இவ்விழாவில் கலந்துகொள்ள தமிழகம் வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஈஷா சிவராத்திரி விழாவை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கில், சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், உள்ளிட்ட 32 இடங்களில்  பெரியதிரைகளைக்கொண்டு நேரடி ஒளிபரப்பு மூலம் மகா சிவராத்திரி விழா கொண்டாப்பட உள்லது.

கோவையில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் நாட்டுப்புற கலைஞர் வேல்முருகன், ராஜஸ்தானி நாட்டுப்புற கலைஞர் மாமே கான், பின்னணி பாடகர் ராம் மிரியாலா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.