சென்னை: 
மிழகத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் குறைகிறது என்று  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்றைய (செவ்வாய்க்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 64 ஆயிரத்து 977 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 638 ஆண்கள், 414 பெண்கள் என மொத்தம் 1,052 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரும், வெளிமாநிலங்களில் இருந்த வந்த 5 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 44 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 250 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் 311 பேரும், கோவையில் 114 பேரும், திருவள்ளூரில் 67 பேரும், செங்கல்பட்டில் 63 பேரும், காஞ்சீபுரத்தில் 43 பேரும், சேலத்தில் 38 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 32 லட்சத்து 88 ஆயிரத்து 389 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 9 ஆயிரத்து 14 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 4 லட்சத்து 88 ஆயிரத்து 845 ஆண்களும், 3 லட்சத்து 20 ஆயிரத்து 135 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 28 ஆயிரத்து 692 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து6 ஆயிரத்து 82 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 10 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் என 17 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 8 பேரும், கோவையில் 3 பேரும், செங்கல்பட்டில் 2 பேரும், திண்டுக்கல், மதுரை, திருவள்ளூர், தூத்துக்குடியில் தலா ஒருவரும் என 7 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 12,012 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் நேற்று தமிழகத்தில் உயிரிழப்பு 12 ஆயிரத்தை கடந்தது.
கொரோனா பாதிப்பில் இருந்து 1,139 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 295 பேரும், கோவையில் 114 பேரும், செங்கல்பட்டில் 54 பேரும், திருவள்ளூரில் 55 பேரும், சேலத்தில் 43 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 7 லட்சத்து 87 ஆயிரத்து 611 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 9 ஆயிரத்து 391 பேர் உள்ளனர்.
தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 929 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 1,024 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 473 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேரும் என மொத்தம் 6 ஆயிரத்து 888 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.