சென்னை: பேனா நினைவுச் சின்னத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் விரிவான அறிக்கையை  தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை அண்ணா சமாதி வளாகத்தில் பிரமாண்டமான  நினைவாலயம் அரசு செலவில் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கருணதாநிதியின்  எழுத்துத் துறை பங்களிப்பை போற்றும் வகையில் ரூ.81 கோடி செலவில், தமிழக அரசுசார்பில் அவருக்கு மெரினா கடற்கரையில் பேனா வடிவிலான நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இத்திட்டம் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.81 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்படி, 2 ஆயிரத்து 263 சதுர மீட்டர் பரப்பில் பேனா நினைவுச் சின்ன பீடம், 2 ஆயிரத்து 73 சதுர மீட்டர் பரப்பில் நடைபால அமைப்பு, 1856 சதுரமீட்டர் பரப்பில் பின்னல் நடைபாலம், 1610 சதுர மீட்டர் பரப்பில் கடற்கரைக்கு மேல் பாதசாரிகள் பாதை,748 சதுர மீட்டர் பரப்பில் நினைவிடத்தில் இருந்து பாலம் வரையிலான நடைபாதை என மொத்தம் 8 ஆயிரத்து 551 சதுர மீட்டர் பரப்பில் பேனா நினைவு சின்னம் அமைய உள்ளது. மேலும், கருணாநிதியின் பொன் மொழிகள் நினைவு சின்ன பீடத்தில் பதிக்கப்பட உள்ளன.

பீடத்தை சுற்றி உள்ள பகுதிகள் கோலம் வடிவில் அமைக்கப்படவுள்ளன. இப்பரப்பு முழுவதும் கடல் பரப்பினுள் அமைய இருப்பதால், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி அனுமதி பெற வேண்டியுள்ளது.இதற்கான அனுமதி கோரி பொதுப்பணித்துறை, மாவட்ட கடலோரமண்டல மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பித்து இருந்தது.

அதை பரிசீலித்த ஆணையம், மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. பின்னர் தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது அவசியம். அதன்படி தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்காக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஜனவரி 31ந்தேதி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சலசலப்பு ஏற்பட்து.

இதற்கிடையில்,  பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்க எதிர்ப்பு தெரிவித்து, பேனா நினைவுச் சின்னத்திற்கு தடை விதிக்கக்கோரி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் என்பவர் மனு கொடுத்திருந்தார். அவரது மனுவில்,  ”பேனா நினைவுச் சின்னக் கட்டுமானத்திற்கு தடை விதிக்க வேண்டும். பேனா நினைவுச்சின்னத்திற்காக CRZ விண்ணப்பத்தை பரிசீலிக்க மத்தியஅரசுக்குத் தடை விதிக்க வேண்டும். மெரினாவிலும், கொட்டிவாக்கம் – கோவளம் கடற்கரையிலும் யாருக்கும் சமாதி அமைக்கக் கூடாது என தடை விதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையின்போது, இத்திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியதுடன், இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் விசாரணையின் போது நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா பத்திரிகைகளில் நான் படித்தது உண்மை என்றால் அது கருத்துக்கேட்புக் கூட்டமே இல்லை. எல்லா தரப்பினரையும் அழைத்து நடத்தப்பட்டதா? என கேள்வி எழுப்பினார்.  மேலும் இத்திட்டம் குறித்து விரிவான அறிக்கையை  தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு  வழக்கை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்திவைப்பட்டது.‘

சமீபத்தில் பேனா சின்னம் அமைப்பதற்கு, தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம், அனுமதி அளித்த நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விண்ணப்பத்தை பரிசீலனை செய்த மத்திய அரசு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு மத்தியஅரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் மீனவர்கள் உட்பட பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நினைவுச் சின்னத்தை பார்வையிடக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு, உரிய பாதுகாப்பு வசதிகள் குறித்தும், சுனாமி உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா? என்பதும் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.