புதுடெல்லி:
6– 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இன்று முதல் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நாடு கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து முழுவீச்சுடன் போராடி வருகிறது. தேசிய அளவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து கட்டுக்குள் இருந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக இதில் மாற்றம் ஏற்பட்டது. தினசரி தொற்று பாதிப்பு மெல்ல, மெல்ல எழுச்சி பெறத்தொடங்கியது.

குறிப்பாக டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம் போன்ற வட மாநிலங்களில் தொற்று பாதிப்பு ஏறுமுகம் கண்டு வருகிறது. கேரளாவிலும் மறுபடியும் தொற்று அதிகரிக்கிற போக்கு காணப்படுகிறது. இந்தநிலையில் நாடு முழுவதும் 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இன்று முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கோவேக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து அளிக்கிறது. இந்த தடுபபூசி 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கானது.