பிரபல திரைப்படத்தொகுப்பாளர் அணில் மல்னாட் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (மார்ச் 19) காலை 7.45 மணிக்கு மறைந்தார்.  அவருக்கு வயது 60.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ள அவர் சுமார் 600 க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார். நந்தி விருது உள்ளிட்ட பல மாநில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் வெளியான ‘சித்தாரா’ படத்திற்காக தேசிய விருது பெற்றவர் அணில் மல்னாட். தமிழில், ஆர்.வி.உதயகுமார் இயக்கிய ‘கிழக்கு வாசல்’, உட்பட, ஏராளமான படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், உடல் நலக்குறைவுக் காரணமாக அணில் மல்னாட் இன்று மறைந்தார்.  சென்னை குரோம்பேட்டை, பாரதிபுரத்தில்  உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்கு அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. . ஏராளமான திரையுலகினர்  அஞ்சலி செலுத்தினார்கள்.

அணில் மல்னாட்டின் இறுதிச் சடங்கு நாளை (மார்ச் 20) காலை 7 மணிக்கு குரோம்பேட்டை மையானத்தில் நடைபெற  இருக்கிறது.