சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற் றது. , இதன் காரணமாக, சென்னைக்கு கனமழை அபாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், நாகை, தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங் களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான்-நிகோபார் தீவுகளில் நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று  மாலை தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது இன்று  காலை மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

அதன்பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16ம் தேதி ஆந்திரப் பிரதேச கடற்கரையில் மேற்கு மத்திய வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பின்னர், வடக்கு-வடகிழக்கு திசையில் மீண்டும் வளைந்து நவம்பர் 17 அன்று ஒடிசா கடற்கரையில் வடமேற்கு வங்க கடலை அடையும்  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள பதிவில், 15-ம் தேதி (இன்று) காலை 8.30 மணி வரை புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மிக கனமழை அபாயம் உள்ள மாவட்டங்களில் சாலைகள் வழுக்கும் என்றும், போக்குவரத்து நெரிசல் பாதிப்பு, தண்ணீர் தேக்கம், நீர்நிலைகளில் தண்ணீர் அதிகரிப்பு உள்ளிட்டவை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

முன்னேற்பாடுகள்:
கனமழை அபாயம் உள்ள மாவட்டங்களில் 7 முதல் 11 செ.மீ. மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், மிக கனமழை அபாயம் உள்ள மாவட்டங்களில் 12 முதல் 20 செ.மீ. மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்ச மாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணியில் 17 செ.மீ. மழையும், நாகப்பட்டினத்தில் 15 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையில் மழை அபாயம் இருப்பதையடுத்து மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.