சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் என்ற தமிழர் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதிபர் ஹலிமா யாகூப்பின் பதவிக்காலம் செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து அடுத்த அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்தினம், இங் கொக் சொங் மற்றும் டான் கின் லியான் என மூன்று பேர் போட்டியிட்டனர்.

இதில் தர்மன் சண்முகரத்தினம் வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்தது.

இந்த நிலையில், அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் 70.4 சதவித வாக்குகள் பெற்று அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் சிங்கப்பூரின் துணைப் பிரதமராகவும், கல்வி, நிதி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றதை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்ததை அடுத்து சிங்கப்பூரின் 9 வது அதிபராக அவர் பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.