திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது  ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம்சக்தி என கோஷத்துடன் கோவிலின் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

திருச்சியை அடுத்த சமயபுரம் பகுதியில் குடிகொண்டு அருளாட்சி செய்து வருகிறார் மாரியம்மன்.  பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா இன்று  கொடியேற்றத்துடன் தொடங்கியது.  கொடியேற்றத்தையொட்டி, திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில்  தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இதையொட்டி முன்னதாக இன்று அதிகாலை  உற்சவம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மன் மரக்கேடயத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

தொடர்ந்து காலை 7.28 மணிக்கு  கோவில் கொடிமரத்தில் தைப்பூச கொடியேற்றம் கோலாகலமாக   நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் இரவில் அம்மன் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை,வெள்ளி சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

விழாவின் உச்ச நிகழ்ச்சிகளாக, திருவிழாவின் 8 ம் நாளன்று அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். 9ம் நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.  10-ம் நாளான 25-ந் தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் தைப்பூச விழாவிற்காக அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயம் கண்டருளி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வடக்காவேரிக்கு சென்று அடைகிறார். அன்று மாலை கொள்ளிடம் வடகாவிரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது . இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் தனது அண்ணனான ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர்வரிசை பெரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பின்னர் 26-ந் தேதி இரவு ஒரு மணி முதல் அதிகாலை 2 மணி வரை மகா அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

அன்று காலை முதல் இரவு வரை அம்மன் வழிநடை உபயம் கண்டருளுகிறார். பின்னர் இரவு பாஸான மண்டபத்திற்கு சென்றடைகிறார். அங்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று பின்னர் கொடி மரம் முன்பு எழுந்தருளி கொடி இறக்கப்படுகிறது. தொடர்ந்து நள்ளிரவில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள், கோயில் குருக்கள் செய்து வருகின்றனர்.