விருதுநகர்: தை அமாவாசையையொட்டி, சதுரகிரி மலைக்கோவிலுக்குச் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரியில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால், ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

அதன்படி தை மாத அமாவாசையை முன்னிட்டு வருகிற 7-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை, 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும், பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டள்ளது.  அதன்படி 10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப் பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்கக் கூடாது. இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்துள்ளனர்.

அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேறப் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.