கொரோனா பரவல் நெருக்கடி காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விதித்துள்ளது. அந்த வகையில், கோயம்புத்தூரில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை திரையரங்குகள் திறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தடையை நீக்க வேண்டும் எனக் கோயம்புத்தூரைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துவந்த நிலையில், இது தொடர்பாக ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளித்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று, ஞாயிற்றுக் கிழமைகளில் திரையரங்குகள் திறப்பதற்கு இருந்த தடையானது தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை நீக்கத்திற்கு நன்றி தெரிவித்து ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.