ஐதராபாத்:

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்ற முடிவை தெலுங்கு தேசம் எடுக்கவில்லை. மாறாக என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கவும், நிதி பெற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் புறக்கணிக்கப்பட்டது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறும் என்று பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியின் சிறப்பு கூட்டம் இன்று நடந்தது.

கூட்டத்துக்கு பின் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஒய்.எஸ். சவுத்ரி கூறுகையில், ‘‘மாநில நலன் சார்ந்த பல பிரச்னைகள் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. அவற்றை சரிசெய்ய மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்வோம். நாடாளுமன்றத்திற்கு வெளியேயும், உள்ளேயும் இதற்கு குரல் கொடுக்கப்படும். சஸ்பெண்ட் செய்யும் நிலை வந்தாலும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகும் மத்திய அரசிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை என்றால், சந்திரபாபு நாயுடு சரியான முடிவை எடுப்பார். அதுவரை பொறுத்திருந்து பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு போதுமான ஒதுக்கீடு செய்யாமல் அநீதி இழைக்கப்பட்டதில் மாநில மக்கள் பாஜக மீது கோபத்துடன் உள்ளனர். மாநிலத்துக்கு நிதி பெற நாங்களும் நாடாளுமன்றத்தில் இதை எதிரொலிப்போம்’’ என்றார்.