சென்னை: வடசென்னை அனல் மின்நிலையத்தில் 2 அலகுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தில் முதலாவது நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

2வது நிலையில் இருக்கும் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  கடந்த 20ம் தேதி 2ம் நிலையில் உள்ள 2வது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஏற்கெனவே 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந் நிலையில், 2ம் நிலையின் முதல் அலகிலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதனால் ஒரே நேரத்தில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் மொத்தம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த 2 அலகுகளிலும் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.