சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்காக செய்யப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய உள்ளோம்.

தமிழகத்தில் அரசு எடுத்த துரித நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தில் இருந்து தற்போது 34 ஆயிரத்து 800 என்ற அளவில் குறைந்து உள்ளது. தமிழகத்திற்கு தற்போது வரை 80 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை 70 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

18 வயது முதல் 44 வயதில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு ரூபாய் 46 கோடி செலவில் 12 லட்சம் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தடுப்பூசி போடதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்காக 3.5 கோடி தடுப்பூசிகள் வாங்குவதற்கு உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவ ஆக்சிஜனுக்கு இக்கட்டான சூழல் இருந்தது. ஆனால், தமிழக சுகாதாரத்துறை, தொழில்முறை, மின்சார வாரியத்துறைகளின் முயற்சியால் ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா போன்ற பகுதிகளில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு தற்போது மருத்துவ ஆக்சிஜன் தேவை முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயினால் இதுவரை 131 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.

கொரோனா பாதிப்பில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆய்வு செய்ய பல்துறை அலுவலர்கள் அடங்கிய 10க்கும் மேற்பட்டவர்களை கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

ஸ்டீராய்டு கொடுப்பதாலும், அசுத்தமான தண்ணீரில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்து அதை மூச்சாக உள்ளிழுப்பதாலும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதாக தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து, ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வல்லுனர்கள் குழு இரண்டு நாட்களிலே ஆராய்ச்சியைத் தொடங்கும்.

கொரோனா வைரசின் உண்மையான உயிரிழப்பை சொன்னால்தான் மக்களுக்கு விழிப்புணர்வும், பயமும் வரும். எனவே, கொரோனா விழிப்புணர்வில் எந்த ஒளிவுமறைவும் இல்லை என்றார்.

பின்னர் திருச்செந்தூருக்கு சென்றவர், அங்கு அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தினை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்காக நடைபெற்று வரும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணியை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில், அரசு பள்ளி ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தூத்துக்குடி ஸ்பிக் மருத்துவமனையில்  கொரானா தடுப்பூசி செலுத்தும் மையத்தினை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். ‘இந்தநிகழ்ச்சியில் அவருடன் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ. கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), ஊர்வசி அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), மாநகராட்சி ஆணையாளர் ஷரண்யா அறி,  சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மற்றும் திமுக பொதுகுழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, ஸ்பிக் முழுநேர இயக்குநர் ராமகிருஷ்னன் முதன்மை ஆப்ரேட்டர் பாலு, துனை தலைவர் கோபால கிருஷ்னன், அட்மின் மேலாளர் ஜெயபிரகாஷ், ஸ்பிக் மக்கள் செய்தி தொடர்பாளர் அமிர்த  கெளரி மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் பொது மக்கள்கலந்து  கொண்டனர்