சென்னை: தமிழகத்தில் மே 1ந்தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவித்து உள்ளார்.

மே 1ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை  சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும்,  12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மறு அறிவிப்பு வரும் வரை வீட்டில் இருந்தபடி மாணவர்களுக்கு வழிகாட்ட அறிவுரை கூறப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான அறிவிப்பில், கொரோனா பரவல் காரணாமாக ஆசிரியர்கள் அனைவரும் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் , தடுப்பூசி போட்டுக்கொண்டது குறித்த விவர அறிக்கையை பள்ளி இயக்குநகரத்து அனுப்ப வேண்டும் என்றும் ,கொரோனா தடுப்புப் பணிகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது ஆசிரியர்களுக்கு மே 1ந்தேதி முதல் விடுமுறை அறிவித்து உள்ளது.

இதுகுறித்து பள்ளிகல்வி இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

2020-21 ஆம் கல்வி ஆண்டில் கோவிட் – 19 பெருந்தொற்று பரவலின் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணாக்கர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்து கல்வி கற்கும் சூழல் நாளது வரை ஏற்படவில்லை.

9 முதல் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் துவக்கப்பட்டு கோவிட் -19 நோய் தொற்று அதிகரித்ததால் , 22.03.2021 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு செய்முறைத் தேர்வுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் , 05.05.2021 அன்று தொடங்க இருந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கோவிட் -19 நோய் தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு நேரில் வர வேண்டிய அவசியம் தற்போது எழவில்லை.

எனினும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி குறித்து மறு அறிவிப்பு வரும் வரை அவர்களை பொதுத் தேர்வுக்கு தொடர்ந்து தயார் செய்தல் வேண்டும்.

மேலும் , ஏனைய வகுப்பு மாணவர்கள் கற்றல் இடைவெளியின்றி பயில்வதை உறுதி செய்யும் பொருட்டு Bridge Course Material மற்றும் Work book வழங்கப்பட்டு , இது தொடர்பான நிகழ்ச்சிகள் கல்வி தொலைக்காட்சியில் தினசரி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் , அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வருகின்ற 01.05.2021 முதல் பள்ளிகளுக்கு வர தேவையில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி குறித்து மறு அறிவிப்பு வரும் வரை அவர்களுக்கான வழிக்காட்டுதல்களை ( Guidance ) ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து வழங்கவும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு Bridge Course Material மற்றும் Work book இல் உள்ள பாடங்களை கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்கவும் , பயிற்சிகளை மேற்கொள்ளவும் , வீட்டில் இருந்தபடியே ஆசிரியர்கள் தொடர்ந்து வழிக்காட்டுதல்களை வழங்கவும் , இதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் உள்ள அலைபேசி , வாட்ஸ் அப் அல்லது பிற டிஜிட்டல் வழிகள் மாற்று வழிகள் ( Digital / Alternate Modes ) பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மாணவர்கள் மேற்காண் வழிகளில் அனுப்பும் பயிற்சிகளுக்கான விடைத்தாட்களை சரிபார்த்து தேவையான வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் .

அடுத்த கல்வியாண்டுக்கு பள்ளிகளை தயார் செய்யும் பொருட்டும் , அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளும் பொருட்டும் , மாணவர்களுக்கான மேற்கண்ட பயிற்சிகளை ஆய்வு செய்து அதற்கான தொடர் நடவடிக்கை எடுக்கும் பொருட்டும் 2021 மே மாத கடைசி வாரத்தில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் , இதற்கான அறிவிப்பு தனியே வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்காண் வழிகாட்டுதல்களை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரியப்படுத்தி தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் .