சென்னை:

பொங்கல் விழாவையொட்டி கடந்த  3 நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.475 கோடி அளவிலான மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பிரபல ஹீரோக்களான ரஜினி, அஜித் படங்களில் வசூலைவிட அதிகம் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டை விட 10 சதவீதம்  அதிகம் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்த கடைகளின் மூலம்தான்  அரசுக்கு அதிகம் வருவாய் வந்துகொண்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலேயே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

கடந்த  தீபாவளி பண்டிகையின் போது 328 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. இந்த பொங்கல் பண்டிகையின் போது தீபாவளி பண்டிகையை விட கூடுதலாக விற்பனை செய்யப்பட் டுள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கு ரூ.475 கோடி ரூபாய் அளவிலான மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

15ந்தேதி பொங்கல் தினத்தன்று 209 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த விற்பனை ரூ.204 கோடியாக இருந்தது. திருவள்ளுவர் தினமான 16-ந்தேதி மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால், காணும் பொங்கல் 475 கோடிக்கு மது விற்பனை ஆகி இருப்பதாக  டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வருமானமானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி உள்ள பேட்ட திரைப்படம் மற்றும் தல அஜித் நடித்து வெளியாகி உள்ள விஸ்வாசம் திரைப்படத்தின் வசூல்களைவிட அதிகம் என்று கூறப்படுகிறது.

தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின் போது விடுமுறைகளை உற்சாகமாக  செலவிட திரைப்படங்களுக்கு செல்பவர்களைவிட  தற்போது டாஸ்மாக்  செல்பவர்கள்தான் அதிகம் என்பது இந்த வசூல் மூலம் தெரிய வந்துள்ளது.