சேலம்: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால்தான் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், 14ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகளையும் திறக்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இன்று சேலம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.,

மேட்டூர் அணையை ஆண்டுதோறும் ஜூன் 12ந்தேதி திறந்து வைப்பதில் அரசு உறுதியாக உள்ளது. மேட்டூர் அணை தண்ணீர் கடைமடை பகுதி வரை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி உணவுத்துறையில் தமிழகம் சாதனை படைக்கும். பயிர் சாகுபடி பரப்பளவை 75% அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. நான் ஆட்சி பொறுப்பேற்கும்போது, தினசரி தொற்று பாதிப்பு 36 ஆயிரமாக இருந்தது. உரிய நடவடிக்கை எடுத்து, முழு ஊரடங்கைக் கொண்டு வந்தோம்.  தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது 16 ஆயிரத்துக்கும் கீழே வந்துள்ளது.ங

சென்னையில் 7,000 ஆக இருந்த தொற்று பாதிப்பு, தற்போது 1,000 ஆகவும், கோவையில் 5,000 ஆக இருந்தது, தற்போது 2 ஆயிரத்துக்குக் கீழேயும், சேலத்தில் 1,500-ல் இருந்து 900 ஆகவும் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்தது. இப்போது, தட்டுப்பாடு என்ற சூழல் இல்லை. சென்னையில் ‘வார் ரூம்’ திறக்கப்பட்டபோது, மே 20-ம் தேதி 4,768 அழைப்புகள் வந்தன. இப்போது, 200 முதல் 300 அழைப்புகளே வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி அதிக அளவில் வேண்டும் என மத்திய அரசிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.

மக்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு, ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளோம். இதனை மக்கள் அலட்சியமாக பயன்படுத்தக் கூடாது. அவசியமின்றி மக்கள் வெளியில் நடமாடக் கூடாது. வெளியில் நடமாடுவதை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். மக்களிடம் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்.

ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. கொரோனா குறைந்ததால்தான் டாஸ்மாக் கடை திறக்கப்படுகிறது. அதேநேரத்தில்  கொரோனா அதிகம் உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக்குகள் திறக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி அதிக அளவில் வேண்டும் என மத்திய அரசிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். டெல்லியில் வரும் 17ந்தேதி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அப்போது தமிழக பிரச்சினைகள் குறித்து எடுத்துக்கூறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில்,  அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு கொறடா கோ.வி.செழியன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், எம்.பி-க்கள் பார்த்திபன், செந்தில்குமார், எம்எல்ஏ-க்கள் உதயநிதி ஸ்டாலின், ராஜேந்திரன், சதாசிவம், கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறை, திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.