தஞ்சை: மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதாக வீடியோ வெளியிட்டு, தற்கொலை செய்துகொண்ட தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா  தற்கொலை தொடர்பான வழக்கில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க மாணவியின் தந்தைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்கவும் மறுத்து விட்டது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி லாவண்யா,  தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார். இவர், ஜனவரி 9-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி,  ஜனவரி 19 ஆம் தேதி உயிரிழந்தார்.

மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது .மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகத்தின் மத மாற்ற அழுத்தம்தான் காரணம் என கூறப்படுகிறது.ஆ னால் இது வெறும் வதந்தி என்றும், பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், இது தொடர்பாக வெளியான வீடியோக்கள் மற்றும் காவல்அதிகாரி மற்றும் அமைச்சரின் பேச்சு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், மாணவியின் தற்கொலை விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழகஅரசு  மற்றும் பள்ளி தரப்பில்  உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. முன்னதாக மாணவியின் தந்தை கேவியட் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், தமிழகஅரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு வேண்டுமென்றே அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும்  வாதிட்டது.

இதனையடுத்து, சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதி மன்றம்,  தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க கோரி மாணவியின் தந்தைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.