சென்னை: பெண்களுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் என நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். மேலும், தான் ஒரு வாக்குறுதி கொடுத்தால், அதை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றும், பெண்களுக்கு ரூ.1,000 விரைவில் வழங்கப்படும் என்றும் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று சென்னையில் இருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, உள்ளாட்சியை ஊழலாட்சியாக மாற்றி, அந்தக் கொள்ளை சாம்ராஜ்யத்தைக் காப்பாற்ற உள்ளாட்சித் தேர்தலையே நடத்தாமல் இழுத்தடித்தது அதிமுக ஆட்சி! உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் அத்தகைய கறைபடியாமல் தடுக்க; நமது நலத்திட்டங்களை மக்களுக்கு முறையாகச் சேர்க்க அனைத்து இடங்களிலும் வெல்வோம் என்று கூறினார்.

காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு,  தி.மு.க. வரலாற்றை முழுதாக அறியாமல் ஆண்டாண்டு காலமாக பரப்பி வைக்கப்பட் டிருக்கின்ற பொய்களை நம்பி, தமிழர்களுக்கு எதிரான, தமிழ்நாட்டுக்கு எதிரானவர்களின் சதிவலையில் சிக்கியிருக்கின்ற சிலரையும் மீட்டாக வேண்டும். அதற்கு நம்முடைய சாதனைகளை வீதிதோறும், வீடுதோறும் கொண்டு செல்லுங்கள்.

நம்முடைய கொள்கைகளை எடுத்துச்சொல்லுங்கள். இளைஞர்களுக்கு விழிப்புணர்வூட்டி, அரசியல்மயப்படுத்துங்கள். இதையெல்லாம் தேர்தலுக்காக மட்டுமல்ல, இந்த இனத்தை பாதுகாப்பதற்காக நாம்தான் செய்தாக வேண்டும். நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 825 பதவிகளிலும், தி.மு.க. வேட்பாளர்களும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களும் தான் வெற்றி பெற்றாக வேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றால்தான், அது முழுமையான வெற்றியாக, மகத்தான வெற்றியாக இருக்கும். சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றுகின்ற நல்ல பல திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக போய்ச்சேர வேண்டும். அதற்கு உள்ளாட்சி அமைப்புகள் முழுமையாக நம்முடைய கையில் இருக்க வேண்டும்.

கடந்த அண்ணா தி.மு.க. ஆட்சிக்காலத்தில், நம்முடைய மாநிலம் என்ன நிலைமைக்கு தள்ளப்பட்டது என்று தமிழ்நாட்டு மக்கள் எல்லாருக்குமே தெரியும். நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. உள்ளாட்சி தேர்தலையே நடத்த மனமில்லாமல் நாட்களை கடத்திக் கொண்டுபோன ஆட்சிதான் அண்ணா தி.மு.க. ஆட்சி. உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் தி.மு.க.வினர் வெற்றி பெற்று விடுவார்கள். அவ்வாறு வெற்றி பெற்று வந்தால், அண்ணா தி.மு.க.வினருடைய ஊழல்களை ஆதாரங்களோடு அம்பலப்படுத்துவார்கள் என்று அஞ்சி நடுங்கி, உள்ளாட்சி தேர்தலையே நடத்தாமல் வைத்திருந்த ஆட்சிதான் அண்ணா தி.மு.க. ஆட்சி.

மீண்டும் ஊழல் சாம்ராஜ்யத்தை நடத்த முடியுமா என்ற ஏக்கத்தோடுதான் ‘தினம் ஒரு பொய்’ நிகழ்ச்சியை, காமெடியாக நடத்திக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அண்ணா தி.மு.க.வுக்கு அளிக்கிற வாக்கு என்பது ஊழலுக்கு அளிக்கும் வாக்கு. லஞ்ச லாவண்யத்துக்கு அளிக்கின்ற வாக்கு. அராஜகங்களுக்கு அளிக்கின்ற வாக்கு. இதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.

தன்னுடைய கற்பனை வளத்தை வளர்த்துக்கொண்டு புது புது பொய்களை எடப்பாடி பழனிசாமி சொல்லிக்கொண்டிருக்கிறார். நாம் மக்களுக்காக ஆற்றிவரும் பணிகளை நான் தொடர்ந்து பதிவு பண்ணிக்கொண்டு வருகிறேன். கவர்னர் உரையில் 66 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் 49 அறிவிப்புகளுக்கு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 75 சதவீதம் அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதி, நிதிநிலை அறிக்கை, 110 விதிகள் என்று மொத்தம் 1,641 அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் 1,238 அறிவிப்புகளுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு, 75 சதவீதத்துக்கும் மேலான அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இப்படி நமக்கு செய்வதற்கு ஏராளமான பணிகள் இருக்கிறது. 10 ஆண்டுகளாக சீரழிக்கப்பட்ட தமிழ்நாட்டை சீரமைத்தாக வேண்டும். அடகு வைக்கப்பட்ட நம் மாநில உரிமைகளை மீட்டாக வேண்டும். எதிர்காலத்துக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றியாக வேண்டும். கடன் மேல கடன் வாங்கி, அதற்கு வட்டி கட்ட முடியாமல், வட்டி கட்டக் கடன் வாங்கி, அதுக்கு வட்டி கட்டி என்று ரூ.5 லட்சம் கோடி கடனில் தமிழ்நாட்டைத் தள்ளி, கஜானாவை கபளீகரம் செய்து காலி பண்ணிவிட்டார்கள்.

இந்த நிலையில் இருந்து மீட்டு, விரைவில் மகளிர் உரிமைத் தொகையான மாதம் ரூ.1,000-ம் வழங்கப்போகிறோம். யாரையும் நாங்கள் ஏமாற்றப்போவதில்லை. இந்த ஸ்டாலின் ஒரு வாக்குறுதியை கொடுத்தால், அதை நிச்சயம் நிறைவேற்றுவான். இது தமிழ்நாட்டு தாய்மார்களான என்னோட சகோதரிகளுக்கு நன்றாக தெரியும். நான் காணொலியில் உங்களைச் சந்தித்துக்கொண்டு இருக்கிறேன். மக்களை சந்திப்பதை தவிர்ப்பதற்காக, நான் காணொலியில் பரப்புரை செய்வதாக, மக்களால் புறக்கணிக்கப்பட்ட சிலர் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய கற்பனை திறனை பார்த்து எனக்கு சிரிப்புதான் வருகிறது. இந்த ஸ்டாலின் எப்போதும் மக்களோடு மக்களாக இருப்பவன்.

இது கொரோனா காலம். லட்சக்கணக்கானவர்களை இப்படி கூட்டி கூட்டம் நடத்துவது சாத்தியம் இல்லை. அதனால்தான் காணொலி மூலமாக சந்திக்கிறேன். இதனை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள், குறை சொல்கிறார்கள். ‘என்றைக்கும் தமிழ்நாடுதான் நம்பர் ஒன்’ என்ற நிலைய அடைய, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முழுமையான வெற்றியை பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.