சென்னை

இன்று தொடர்ந்து மழை பெய்து வருவதால் இதை அற்புதமான நாள் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் புகழ்ந்துள்ளார்.

நேற்றிரவு முதல் தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அத்துடன் காற்றின் திசை மாற்றம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக உண்டான இந்த மழை நாளை வரை நீடிக்குமென சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மக்கள் இந்த மழையால் மிகவும் மன மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் இது குறித்து சமூக தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், “ தற்போது சென்னை நகரம் சிவப்பு தக்காளியால் சூழப்பட்டுள்ளது. அதாவது, சென்னை முழுவதும் மழை மேகங்களால் சூழப்பட்டிருப்பதை  அவ்வாறு தெரிவித்துள்ளேன், இந்த நாள் பருவமழையின் ஓர் அற்புதமான நாளாக இருக்கும் இன்று சூரிய உதயத்திற்கு பிறகும் மழை தொடர்ந்தால் ஆச்சரியப்படமாட்டேன். இதைப் போன்ற நாட்கள் கிடைப்பது அரிதானது, அனைவரும் இதனை அனுபவியுங்கள். இது வட தமிழகத்தின் வானிலையில் ஒரு சிறந்த நாள் ஆகும்.

அது மட்டுமின்றி தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் இது சிறந்த நாட்களில் ஒன்றுதான். ஏனெனில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.   திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் 100 மில்லிமீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. அத்துடன் தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், பாண்டி உட்பட பல பகுதிகள் நல்ல மழையைப் பெற்றுள்ளன. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது.

நான் நீண்ட காலமாக வேலூரில் இதுபோன்ற மழையைப் பார்த்ததில்லை. பார்வை தெளிவாகத் தெரியாத அளவுக்குத் தீவிரமாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் வேலூரில் 166 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சுமார்   110 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதத்தில் இப்படி ஒரு மழை பெய்திருக்கிறது. இதற்கு முன்பு 1909 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி 24 மணி நேரத்தில் 106 மில்லிமீட்டர் மழை பெய்திருந்தது.

பெங்களூரும் காற்றின் திசையில் உள்ளதால் அங்கும் இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.” என தெரிவித்துள்ளார்.