சென்னை: நாள் ஒன்றுக்கு 600 கோடி ரூபாய்க்கு குடிக்க காசு வைத்திருப்பவர்களுக்கும், படம் பார்க்க 250 கோடி செலவிடும் தமிழக மக்களுக்கு  எதற்கு இலவசம்  என கேள்வி எழுப்பிய சீமான், பரந்தூரில் ஒரு கல்லை நட்டீர்கள் என்றால் அதை நான் எடுத்துக் கொண்டு போய்விடுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், பந்தலூரில் டேன்டீ தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கூடலூர் சட்டமன்றத் தொகுதியின் பந்தலூர் கடை வீதியில் நாம் தமிழர் கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து சிறப்புரை ஆற்றினார். இந்த  கூட்டத்தில் பேசிய சீமான்,

“இந்தப் பொங்கல் பண்டிகைக்கு மட்டும் ஒரே நாளில் டாஸ்மாக் வசூல் 400 கோடி ரூபாய். கடந்த தீபாவளியின்போது 1,000 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் மது விற்பனை நடந்திருக்கிறது. வெளியில் சொன்னால் பிரச்னை என மறைத்து 600 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் மது விற்பனை என கணக்கு காண்பித்திருக்கிறார்கள். இது அரசு அறிவித்த செய்தி. உண்மையிலேயே ஆயிரம் கோடி வசூலாகி இருக்கிறது. ஆனால் பத்திரிகையில் அரசு வெளியிட்டது 600 கோடி.

எனக்கு ஒரே ஒரு கேள்விதான் ஒரு நாளைக்கு 600 கோடிக்கு  குடிக்க காசு வைத்திருப்பவர்களுக்கு எதற்கு இலவசம்.

ஒரு படத்திற்கு ஒரு வாரத்தில் 250 கோடி வசூல். ஒரு படத்திற்கு, ஒரு பொழுதுபோக்கிற்கு, கேளிக்கைக்கு இவ்வளவு கொட்டிக் கொடுக்க காசு வைத்திருப்பவர்களுக்கு எதற்கு இலவசம்.

டாஸ்மாக்கில். ஆண்டு ஒன்றுக்கு 50,000 கோடி ரூபாய் வசூல் ஆகிறது. ஆனால் இவர்கள் இந்த இலவசத்தை வைத்து ஏமாற்றுகிறார்கள். மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், டிவி உள்ளிட்டவைகளை கொடுக்க 5000 கோடி ரூபாய் இழப்பார்களா என கேள்வி எழுப்பினார்.

தாயகம் திரும்பிய இந்த மண்ணின் மக்களான டேன்டீ தொழிலாளர்களுக்கு 425 ரூபாய் தினக்கூலி கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறது இந்த அரசு. ஆயிரக்கணக்கான தற்காலிகத் தொழிலாளர்களை இவர்களே கட்டாய வேலை நிறுத்தம் செய்துவிட்டு ஆள்பற்றாக்குறை என நாடகமாடுகிறார்கள். நஷ்டத்தில் இயங்குவதாகச் சொல்லி வனத்துறை வசம் ஒப்படைக்கவிருக்கிறார்கள். இதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். டாஸ்மாக்கை நல்ல லாபத்தில் நடத்தும் இந்த அரசுக்கு டேன்டீயை ஏன் லாபத்தில் இயக்க முடியவில்லை?” என்றார்.

இலவச பஸ் பாஸ், பெண்களுக்கு இலவசம் பஸ் என்று சொல்கிறார்கள் முதலில் பஸ் பஸ்ஸாக  இருக்கிறதா? பேருந்துக்குள் மழை பெய்கிறது. நமது சகோதரிகள் பேருந்துக்குள் குடை பிடித்துக்கொண்டு போகிறார்கள்.

கொடுமைக்காரர்களுக்கு ஓட்டை போட்டுவிட்டு எங்களை ரோட்டில் விட்டுவிட்டு கத்த விடுகிறீர்கள்.

விவசாய நிலங்களை அழித்துவிட்டு, எட்டு வழி சாலை எல்லாம் போட முடியாது என எதிர்ப்பு தெரிவித்தவர்,  பரந்தூரில் விமான நிலையம் கட்ட முடியாது. விடமாட்டேன் என்று கூறியதுடன்,

எய்ம்ஸ் மருத்துவமனையை 20 ஆண்டுகளாக கட்டிக் கொண்டிருக்கிறார்களே அது மாதிரி வேண்டுமானால் கட்டலாம். அதில் ஒரு கல்லை நட்டு விட்டு போனார்கள். அதையும் உதயநிதி எடுத்துக்கொண்டு போய்விட்டார்.

நானும் அதேதான் சொல்கிறேன். பரந்தூரில் ஒரு கல்லை நட்டீர்கள் என்றால் அதை நான் எடுத்துக் கொண்டு போய்விடுவேன்.

சொந்தமாக ஒரு வானூர்தி கிடையாது உனக்கு எதற்கு ஐயாயிரம் ஏக்கரில் விமான நிலையம். ரஷ்யாவிற்கும் உக்கிரைனுக்கும் போர் நடந்தபொழுது அங்குத் தவித்துக் கொண்டிருந்த நமது மாணவர்களை அழைத்துக் கொண்டு வர நமக்கென ஒரு விமானம் இல்லை.

அதிகபட்சம் இன்னும் இரண்டு ஆண்டு, அதன் பிறகு ஒரு தேர்தல் வருகிறது. அதையாவது நாம் மாறுதலுக்கான தேர்தலாக எடுத்துக்கொள்ள வேண்டும்”என்றார்.