சென்னை:

பாராளுமன்ற தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் ஆதரவு அளிப்பதாக அறிவித்து உள்ளது. தங்களது ஆதரவை கமல்ஹாசனை நேரில் சந்தித்து தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் அடுத்த மாதம் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக, பாஜக தலைமையில் மற்றொரு கூட்டணியும் களத்தில் உள்ளது. இதைத்தவிர மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் தனியாக களமிறங்கி உள்ளன.

தற்போது வீசி வரும் அனல் காற்றைவிட, தமிழகத்தில் அனல் பறக்கும் தீவிர பிரசாரம் நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில், நடைபெற இருக்கும் தேர்தலில்,  மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் ஆதரவு அளித்து இருக்கிறது.

ஆவின் மற்றும் தமிழ்நாடு தனியார் பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கக  நிர்வாகிகள் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள  மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் கமல் ஹாசனை நேரில் சந்தித்து எதிர்வரும் தேர்தலில் தங்களின் ஆதரவை அளிப்பதாக தெரிவித்தனர்.

இது தனக்கு மகிழ்ச்சியை தருவதாக கமல்ஹாசன் நன்றி தெரிவித்தார்.