சென்னை:

தமிழகம் பல துறைகளில் முன்னேறி, இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாக விளங்குவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ஜார்ஜ்கோட்டையில் முதல்வர் பழனிசாமி, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று தேசியக்கொடி ஏற்றினார்.பிறகு  அவர் உரையாற்றுகையில், “நாட்டின் சுதந்திரத்திற்காக பல சுதந்தர வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளார்கள். போராட்டத்தில் உயர் தியாகம் செய்த அவர்களுக்கு  வீரவணக்கம் செலுத்துவோம். நாட்டிற்காக உயிர்நீத்த வீரர்கள் நினைவிடங்களில் மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுதந்திர போராட்ட வீரர்கள், குடும்பத்திற்கும் ஓய்வூதியம், மருத்துவ வசதி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை ஆகியவை செயல்பட்டு வருகிறது.

பாக்., போரின் போது தனது நகைகளை நாட்டிற்கு அளித்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

நாட்டின் வளர்ச்சி என்பது தனிமனிதனின் வளர்ச்சியை அளவுகோளாக கொண்டது.ஜெயலலிதா முதல்வரான பின் தமிழகம் முன்னேறி வருகிறது.பொருளாதாரம், உணவு, கல்வி குடியிருப்பு தொழில், சுகாதாரம் பாதுகாப்பு தங்கு தடையின்றி கிடைப்பதில்தான் சுதந்திரத்தின் வெற்றி இருக்கிறது.

இதில் தமிழகம் முன்னேறி, இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்ற உழைத்து வருகிறோம். எதிர்வரும் வரும் தடைகளை தகர்த்து மக்களுக்காக சேவையாற்றி வருகிறோம்.

பொது சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தொழில்துறையில் பல மாற்றங்கள் செய்து முதலீட்டாளர்கள் எளிதாக முதலீடு செய்து வருகிறோம்.

கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில்துறை பூங்காக்கள் உருவாக்க முயற்சி செய்யப்படுகிறது. தடையில்லா மின்சாரம் உள்ளிட்டவற்றால் தமிழகம் தொழில்துறையில் முன்னேறி வருகிறது. தமிழகம், 1லட்சம் 26 ஆயிரம் 19 கோடி ரூபாய் அந்நிய முதலீட்டை ஈர்த்து உள்ளது.

தியாகிகள் ஓய்வூதியம் ரூ.12, ஆயிரத்திலிருந்து ரூ.13 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.தியாகிகள் குடும்ப ஓய்வூதியமும் அதிகரிக்கப்படும்.

1,519 ஏரிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. மூன்று வருடங்களில்  ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணைகள் கட்டப்படும்” என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.