சென்னை: தமிழகஅரசின் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மேல்முறையீடு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது.  இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களான  ஜங்லி கேம்ஸ், பிளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள்  சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகஅரசின் சட்டத்தை ரத்து செய்து, 2021ம் ஆண்டு ஆகஸ்டு 3-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. அப்போது, தமிழக அரசின் சட்டம்,  அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது. அத்துடன்,   உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டுவர அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் தீர்ப்பளித்தது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  மனுவில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை முறையாக பரிசீலிக்காமல் சென்னை  உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாகவும், மக்களை பாதிக்கும்,  இதுபோன்ற சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்தது.

தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை நாளை (வெள்ளிக்கிழமை) விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.