சென்னை: தமிழகஅரசு சொத்து வரி உயர்த்தியது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது தடை விதிக்க மறுத்த நிலையில், தற்போது எதிர்த்த தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார்ச் 30ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மே 30ஆம் தேதி சென்னை மாநகராட்சி, சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி, சொத்து வரி உயர்த்தப்பட்டது. தொடர்ந்து உயர்த்தப்பட்ட சொத்து வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில்,  சொத்து வரியை உயர்த்தி அரசு பிறப்பித்த அரசாணை எதிர்த்து தொடரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார்.  இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

வழக்கின் விசாரணையின்போது, மனுதாரர்கள் தரப்பில், சொத்து வரி உயர்வு தொடர்பாக மாநகராட்சி தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர, அரசு தீர்மானிக்க முடியாது என வாதிடப்பட்டது. மத்திய நிதிக்குழு அறிக்கையின் அடிப்படையில், அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும், அதன்பின் மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தாகவும், சொத்து வரியை கணக்கிட முறையான நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில், சென்னையில் 1998ம் ஆண்டுக்கு பின் சொத்து வரி உயர்த்தப்படவில்லை எனவும், வரியை உயர்த்துவதற்கான அவசியம் குறித்தும் ஆவண ஆதாரங்களுடன் விளக்கமளிக்கப்பட்டது. மொத்தவிலை குறியீடு, பணவீக்கம், சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் சொத்து வரி உயர்த்தப்பட்டதாகவும் தெரிவித்த அரசுத்தரப்பு, கடந்த 1977ம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்ட நடைமுறையை கடைபிடித்தே தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக கூறி, அது குறித்த ஆவணங்களையும் தாக்கல் செய்தது.

அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, மக்கள் நலத்திட்டங்களுக்கு தேவையான நிதியையும், அரசின் செலவினங்களுக் காகவும் வருவாயை திரட்டுவதும், வரி விதிப்பால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் சமன்படுத்துவதும் ஒரு மக்கள் நல அரசுக்கு அவசியமாகிறது என்பதால் வரி விதிப்பை வெளிப்படைத் தன்மையுடனும், கேள்விகளுக்கு அப்பாற்பட்டும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நலனுக்காக நிதிக்குழு அளித்த பரிந்துரைப்படி சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்ததில் எந்த தவறும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதி, சொத்து வரியை உயர்த்துவது குறித்த அரசாணை என்பது ஆலோசனையாக உள்ளதே தவிர, உத்தரவாக இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த அரசாணையின் அடிப்படையில், சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 30 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சொத்து வரி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதற்கு காரணங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, சொத்து வரி உயர்த்துவது தொடர்பான அரசாணையையும், மாநகராட்சி தீர்மானங்களையும் செல்லும் என தீர்ப்பளித்தார்.

அதேசமயம், சென்னையை பொறுத்தவரை சொத்துவரி செலுத்தும் 15 லட்சம் பேரில், 30 பேர் தெரிவித்த ஆட்சேபங்களை முறையாக பரிசீலித்து பதிலளித்திருந்தால் இந்த வழக்குகள் நீதிமன்றம் வந்திருக்காது எனத் தெரிவித்த நீதிபதி, ஆட்சேபங்கள் கோரி முறையாக அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை என அதிருப்தியை தனது உத்தரவில் பதிவு செய்துள்ளார்.

சொத்து வரியை நிர்ணயிக்க பின்பற்றப்படும் நடைமுறையை குறை கூற முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, 2022-23ம் ஆண்டுக்கான இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தக் கூறி மனுதாரர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்களை ரத்து செய்து, 2023-24ம் ஆண்டின் முதல் அரையாண்டு முதல், அதாவது வரும் ஏப்ரல் முதல் சொத்து வரி உயர்வை அமல்படுத்த உத்தரவிட்டார்.

சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் பெற ஏதுவாக மாநகராட்சிகள், தங்கள் இணையதளங்களை மேம்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.