சென்னை: தமிழ்நாடு பொருளாதாரம் கலவையாக ஒருங்கிணைந்ததாக பொருளாதாரம் என நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் கூறினார்.

இந்திய தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பின்(CII) இந்தாண்டிற்கான கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் “தமிழ்நாடு-மாநிலத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில் சென்னை ஐ.ஐ.டியின் அறிக்கையை நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய    நிதித்துறை செயலாளர் உதயசந்திரன், தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு துறை பொருளாதாரம் அல்ல, பல துறைகளின் கலவையாக இருப்பதால், தமிழகம் தனது பணியாளர்களை திறன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். “நாங்கள் பல துறைகளில் பெரிய முதலீடுகளை ஈர்க்கிறோம். இந்த வளர்ச்சியைத் தூண்டுவதற்கு, எங்களுக்கு ஒரு பெரிய திறமைக் குழு தேவை, எனவே தற்போதுள்ள பணியாளர்களை திறன், மறுதிறன் மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும், ”என்று  கூறினார்.

மேலும்,  அனைத்தையும் உள்ளடக்கியதாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வளர்ச்சி அடைந்து வருகின்றோம், நாட்டிலேயே முதல் இடத்தில் இருக்கின்றோம். அடுத்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடி மிக முக்கிய பங்கு வகிக்கும்.  தமிழ்நாடு பொருளாதாரம் என்பது ஒரு துறை சார்ந்ததல்ல, உற்பத்தி, ஐடி, மின் வாகனம் என துறை அல்லாமல் அனைத்தின் மிகச்சரியான கலவையாக ஒருங்கிணைந்ததாக நம் பொருளாதாரம் இருப்பதாகவும், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், திறன் மேம்பாட்டுத்திட்டம் ஆகியவை என யுஜிசி நம் மாடலை ஏற்றுக் கொண்டு, பல மாநிலங்கள் நம் மாடலை பின்பற்றுவதாக தெரிவித்தார்.

“மாநிலத்தின் பார்வையில், குறிப்பிட்ட பகுதிகளில், குறிப்பாக சூரிய உதயத் துறைகளில் தொழில்துறையில் ஈடுபட, முதலீடு செய்ய வேண்டும் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்,” என்று  கூறியவர், “பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற சூரிய உதயத் துறைகள் முக்கியமானவை. பச்சை ஹைட்ரஜனில் இருந்து மின்சார வாகனங்கள் வரை நாங்கள் மேலே இருக்கிறோம், ”என்று  மேலும் கூறினார்.

இந்த நிகழ்ச்சயில் பேசிய  சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் பேரா.காமகோடி, ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக செல்கிறோம்.  மேலும், அதிக தொழில்துறை-கல்வி தொடர்பு தேவை என்று வலியுறுத்தினார். “திறமைக்கு பஞ்சமில்லை, இது மாநிலம் முழுவதும் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பரவலாக உள்ளது,” என்று கூறினார்.

மேலும்,  அரசு பள்ளிகளில் கல்வி மற்றும் பாடத்திட்டத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு கலைஞனுக்கும் முதல் மேடை முக்கியம், அதேபோல் புத்தொழில் நிறுவனங்களுக்கு முதல் ஆர்டர் மிக முக்கியமானது. எம்எஸ்எம்இ நிறுவனங்களை உற்சாகப்படுத்தும் போது ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை விரைவில் சென்றடையலாமென தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய சிஐஐ தமிழ்நாடு தலைவர் சங்கர் வாணவராயர் கூறுகையில், மாநிலம் பொருளாதாரப் புரட்சியின் விளிம்பில் நிற்கும் வேளையில் தொலைநோக்குப் பார்வையும், செயல்திறனும் கொண்ட ஒரு போக்கை வகுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த யோசனையுடன் தான் தமிழ்நாடு@100 தொலைநோக்கு ஆவணத்தை உருவாக்கினோம். இது அடுத்த 25 ஆண்டுகளுக்கு 27 முக்கிய துறைகளை மாற்றுவதற்கான வரைபடத்தை அமைக்கிறது,” என்றார். இதில் நான் முதல்வன் திட்டம் மிக முக்கியமான பங்கு வகிக்கும். அத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஐஐடி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி, ஐஐடி மற்றும் சிஐஐ இணைந்து ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை இலக்கை அடைவதற்கு, 30 பிரதான துறைகளில் குறித்த எதிர்கால ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளோம். தமிழ்நாட்டில் 30 துறைகளில் இன்றைய நிலை, இன்னும் 20 ஆண்டுகளில் செய்யவேண்டியது என்ன, சவால்கள், பலம், பலவீனம், உடனடி நடவடிக்கை, நீண்ட கால நடவடிக்கை, கல்வியை மேம்பாடு, திறன் மேம்பாடு என ஒருங்கிணைந்ததாக ஆவணம் வெளியிட்டு உள்ளோம். இவற்றை கல்வி நிறுவனங்களுக்கு அளிக்க உள்ளோம், அவர்கள் தான் மாணவர்களை திறனுள்ளவர்களாக மேம்படுத்த இருக்கின்றார்கள். தமிழ்நாடு அரசுடைய கொள்கை முடிவுகள், அவற்றை எப்படி மேம்படுத்த வேண்டும், பிரதான நிறுவனங்களை எப்படி கையாள்வது என்பதை பரிந்துரைகளாக கொடுத்துள்ளோம்..

ஐஐடி மெட்ராஸ் மற்றும் நான் முதல்வன் இணைந்து, ஐ.டி செக்டார் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் வகையில் பயிற்சி அளிக்கின்றோம். குறிப்பாக முதலமைச்சர் ஐஐடியில் தொடங்கிவைத்த திட்டத்தின்படி, 9-12 மாணவர்களுக்கு பள்ளிகள் அளவிலேயே எலக்ட்ரானிக்ஸ் செய்முறை பயிற்சி கொடுக்கின்றோம். துறை சார்ந்து ஆழ்ந்த பயிற்சி அளிப்பதன் மூலம், பொறியியல் முடிக்கும் போது, மிகப்பெரிய திறனுள்ள மாணவர்கள் நமக்கு கிடைப்பார்கள் என்று கூறினார்.