சென்னை:
மிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 31- ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில், “கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே உள்ள செயல்பாடுகளுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாகப் பணிகள் தொய்வின்றி நடைபெற ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்துப் பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழிற் பயிற்சி நிலையங்கள், தட்டச்சு, சுருக்கெழுத்து நிலையங்கள் 50% மாணவர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் செயல்படுவதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும், இறுதிச் சடங்கில் 20 பேரும் மட்டுமே பங்கேற்க்க அனுமதி தொடரும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி தரப்பட வேண்டும்.

திரையரங்குகள், டாஸ்மாக் பார்கள், நீச்சல் குளங்கள், சமுதாயம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு (புதுச்சேரி நீங்கலாக) தடை நீடிக்கப்படுகிறது. பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், உயிரியல் பூங்காக்களுக்கு தடை நீடிக்கிறது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31- ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது”. இவ்வாறு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.