சென்னை:

கால்நடை மருத்துவப் படிப்புக்கு நேற்று முதல் ஆன்லைனின் விண்ணப்பம் செய்யும் நடவடிக்கை தொடங்கப் பட்டு நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து ஜூலை 3வது வாரத்தில் கவுன்சிலிங் நடைபெறும் என்று துணைவேந்தர் பாலசந்திரன் கூறி உள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல், மருத்துவம் மற்றும் வேளாண்மை படிப்புகளுக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பம் செய்ய தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. அதுபோல கவுன்சிலிங்கும் ஆன்லைன் மூலமே நடைபெறும் என்று அறிவித்து உள்ளது.

இந்நிலையில் தற்போது கால்நடை மருத்துவ படிப்புக்கும் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதற்கான விண்ணப்பம் இன்று முதல்  ஜூன் 6 மாலை 6 மணி வரை கால்நடைத்துறைக்கான இணைய தளத்தில்  விண்ணப்பிக்கலாம். இணையதள முகவரி:  http://www.tanuvas.ac.in 

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, ஜூன் 11 மாலை 5.45 மணிக்குள் அனுப்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவ படிப்புக்கு ஜூலை, 3வது வாரம் கவுன்சிலிங் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை கட்டுப்பாட்டில், சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு மற்றும் நெல்லையில், அரசு கால்நடை மருத்துவ கல்லுாரிகள் உள்ளன.

இந்தக் கல்லுாரிகளில், பி.வி.எஸ்.சி., எனப்படும், கால்நடை மருத்துவம், ஏ.ஹெச்., எனப்படும், கால்நடை பராமரிப்பு படிப்புகளுக்கு, 360 இடங்கள் உள்ளன. மேலும், பி.டெக்., உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு, 40; பி.டெக்., கோழியின தொழில்நுட்பட பட்டப்படிப்புக்கு, 40; பி.டெக்., பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு, 20 இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள, 460 இடங்களுக்கு, 2018 – 19ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலச்சந்திரன் கூறியதாவது,

 

விண்ணப்பங்களை எளிதாக நிரப்பும் வகையில், மாதிரி விண்ணப்பமும் இணைய தளத்தில் அளிக்கப்பட்டுள்ளது. முன்பிருந்ததை விட, நடப்பாண்டில், அதிக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது

கால்நடை மருத்துவ படிப்பில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும், பி.டெக்., உணவு தொழில் நுட்ப படிப்பில், 15 சதவீத இடங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக ஒதுக்கீட்டிற்கும் அளிக்கப்படும்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு, ஒன்பது இடங்களும், வெளிநாட்டினருக்கு, ஐந்து இடங்களும், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்தோருக்கு, இரண்டு இடங்களும் ஒதுக்கப்படும்.

பி.டெக்., உணவு தொழில்நுட்ப பாடப்பிரிவில், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு, தலா, இரண்டு இடங்கள் உள்ளன

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஜூலை முதல் வாரத்திற்குள் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, மூன்றாவது வாரத்தில் கவுன்சிலிங் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.