டெல்லி: குடியரசுத் தின விழாவில் தமிழ்நாடு ஊர்திகளை மீண்டும் சேர்க்க முடியாது என முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை மத்திய பாதுகாப்பு துறை நிராகரித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.

ஜனவரி 26-ஆம் நாள் இந்தியக் குடியரசு தினத்தன்று, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார்கள். இதனைத் தொடர்ந்து இராணுவத்தினரின் வீரசாகசங்கள் நடைபெறும். பின்னர் சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். இதன் தொடர்ச்சியாக, மாநிலங்களின் கலை, கலாச்சாரம், மற்றும் தனித் தன்மையை எடுத்துரைக்கும் வண்ணம் அலங்கார ஊர்திகள் பங்கேற்பது வழக்கம்.

டெல்லி ராஜபாதையில் இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முக்கிய நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான ஊர்திகள் அணிவகுத்து செல்லும். இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணங்களை முன்னிட்டு பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12-ஆக குறைக்கப்பட்டு உள்ளதாகவும், தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கு பெறவிருந்த அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

தமிழ்நாட்டினுடைய கலை, கலாச்சாரம், பண்பாடு, விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு ஆகியவற்றை மத்திய அரசிடம் விளக்கி அனுமதியை பெற்றே ஆக வேண்டும் என அரசியல் கட்சியினர் அழுத்தம் கொடுத்து வந்தனர். இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு, தமிழ்நாட்டின் ஊர்திகள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து அவசர கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில்,  குடியரசுத் தின விழாவில் நிராகரிக்கப்பட்ட தமிழ்நாடு ஊர்திகளை மீண்டும் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும், குடியரசு நாள் விழா அணிவகுப்பில் தமிழக சார்பில் அலங்கார ஊர்தி இடம்பெறாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது.