சென்னை: சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்டு வந்த பறக்கும் ரயில் மேம்பாலம் நள்ளிரவில் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் சிக்கவில்லை என்பது ஆறுதலை அளித்துள்ளது.

சென்னை- ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் பறக்கும் ரயில் பாலம்  கட்டப்பட்டு வந்த நிலையில், அந்த பாலத்தின் ஒரு பகுதி சரிந்து விபத்துக்குள்ளானது.

கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை நடைபெற்று வருகிறது. இதை ஆதம்பாக்கம் வரை நீட்டிப்பு செய்யும் பணி பல ஆண்டு தடங்கல்களுக்கு பிறகு தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி,  வேளச்சேரி- செயின்ட் தாமஸ் மவுண்ட் இணைக்கும் வகையில் சுமார் 80 அடி நீளம், 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ‘ பறக்கும் ரயில் திட்டத்தின் கட்டுமான பணிகள் முடிய உள்ள நிலையில் ஆதம்பாக்கம் அருகே, பறக்கும் ரயில் பாலம் சரிந்து விழுந்தது.

ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் பகுதியில் பறக்கும் ரயில் பால கட்டுமான பணியின் போது இரு தூண்களுக்கு இடைப்பட்ட பகுதி இடிந்து விபத்துக்குள்ளானது. பாலம் சரிந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு மற்றும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவந்த போது பாலம் இடிந்து சரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற ஆதம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். பாரம் தாங்காமல் மேம்பாலம் திடீரென கீழே சரிந்து விழுந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹைட்ராலிக் ஜாக்குகளைப் பயன்படுத்தி ஏவும்போது, கர்டர் ஒரு முனையில் தவறி கீழே விழுந்ததால் விபத்துக்குள்ளானது என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.