தென்காசி: குடும்ப அரசியல்வாதிகளால் தமிழ்நாடு போதையை நோக்கிச் செல்கிறது.  இதனை நான் வேடிக்கை பார்க்க மாட்டேன் என தென்காசியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில்  பேசிய பிரதமர் மோடி கூறினார்.

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அனல்பறக்கும் இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு  திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி), பொன் ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி), ராதிகா சரத்குமார் (விருதுநகர்), ஜான்பாண்டியன் (தென்காசி), எஸ்டிஆர் விஜயசீலன் (தூத்துக்குடி), விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர் நந்தினி ஆகியோரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி  வாக்கு சேகரித்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, , “இனிய தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். இந்த புண்ணிய பூமியான திருநெல்வேலியில் நெல்லையப்பர் காந்திமதி அம்மையை வணங்குகிறேன்” என்று தமிழில் பேசி தனது உரையை தொடங்கியவர், பின்னர் இந்தியில் பேசினார். அவரது பேச்சு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.  மோடி  பேசியதாவது,

தமிழ் புத்தாண்டில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் நல்ல பல திட்டங்களை சொல்லியுள்ளோம். 3 கோடி வீடுகள், முத்ரா திட்டத்தில் அதிகமானோருக்கு கடன், விவசாயம், மீன்வளத்துறை, கடல் பாசி, முத்து வளர்ப்புக்கு உதவிகள் என்று பல்வேறு திட்டங்களை சொல்லியுள்ளோம். ஜி20 உள்ளிட்ட சர்வதேச நிகழ்வு இந்தியாவில் நடத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பாஜக கட்சிதான் பிடித்தாக இருக்கும். தமிழக மக்கள் தான் பாஜகவுக்கு உத்வேகம் அளிக்கிறது. வ. உ. சிதம்பரத்தை பின் பற்றி பாஜக ஆட்சி நடத்துகிறது. காமராஜரை திமுக, காங்கிரஸ், அவமதித்தது. மேலும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை திமுக அவமதித்தது எனக் மோடி குற்றம் சாட்டினார்.

தமிழ் மொழியை நேசிக்கும் எல்லோரும் பாஜகவை நேசிக்க ஆரம்பித்துள்ளீர்கள். இதனால் தேர்தல் அறிக்கையில் தமிழ் மொழிக்கு உலக அங்கீகாரம் பெறப்படும் என சொல்லியுள்ளோம்.  தமிழகத்தை உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற வைப்போம். உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் உருவாக்கப்படும். வளர்ந்த தமிழகம்தான் வளர்ந்த பாரதமாக மாறும். நெல்லை- சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயங்குகிறது. மிக விரைவில் புல்லட் ரயில் தொடங்குவோம்.

திமுக, காங்கிரஸ் தமிழகத்தின் உயிர் நாடியான கச்சத்தீவை அண்டை நாட்டுக்கு தாரை வார்த்தது. திமுக, காங்கிரஸ் கூட்டணியினர் கச்சத்தீவை துண்டித்து வேறுநாட்டுக்கு கொடுத்தனர். இவர்கள் செய்த துரோகத்தால் மீனவர்கள் பல தலைமுறைகளாக தண்டிக்கப்படுகிறார்கள்.

தமிழகம் போதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் இங்குள்ள பெற்றோர்கள் மிகுந்த வருத்ததுடன் உள்ளனர். இங்கு குடும்ப அரசியலில் உள்ளவர்கள் அதை ஊக்குவிக்கிறார்கள். பலகோடிக்கு போதை வர்த்தகம் நடக்கிறது. போதை மாஃபியா யாருடைய பாதுகாப்பில் இருக்கிறது என்பது குழந்தைக்கு கூட தெரியும். போதை பொருட்கள் நடமாட்டத்தை இவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இதனை வேடிக்கை பார்க்கமாட்டேன். போதை வணிகத்தை எதிர்த்து நான் போராடுவேன்.

வளர்ச்சி அடைந்த தமிழகம் வேண்டும் என்றால் பாஜகவை ஆதரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பாஜகவுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப்பெரிய ஆதரவை தமிழக மக்கள் வழங்குகிறார்கள் எனத் தெரிவித்தவர், இந்த தேர்தல் பிரச்சார கூட்டம்தான், நடப்பு தேர்தலுக்காக தமிழகத்தை நான் சந்திக்கும் கடைசி கூட்டமாக இருக்கும்.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

இறுதியில் அனைவரும் செல்போனில் லைட் எரியவைத்து ஆதரவு தெரிவிக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். அதன்படி அனைவரும் செல்போனில் லைட் எரியவைத்து ஆதரவு தெரிவித்தனர்.

₹1368 கோடி நன்கொடை: ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கினாரா லாட்டரி அதிபர் மார்ட்டின்!