சென்னை:

தமிழகம் முழுவதும் நடந்த எழுச்சி போராட்டத்தை தொடர்ந்து மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீங்கி இன்று ஒரு சில இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது. எனினும் நிரந்த தீர்வு வேண்டும் போராட்டக்காரர்கள் தீவிரமாக உள்ளனர்.

 

இந்நிலையில நீதிமன்றத் தடையால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள எருமை பந்தயத்துக்கு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது.

எருமைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி பீட்டா கர்நாடகா கடற்கரை பகுதிகளில் கொண்டாடப்பட்ட விழாவில் நடத்தப்பட்ட எருமை பந்தயத்துக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்க கோரி கம்பாலா அமைப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மீது வரும் 30ம் தேதி விசாரணை நடக்கிறது.

இதற்கிடையில் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்தது போல் எருமை பந்தயத்துக்கும் அவசர கொண்டு வர வேண்டும் என்று அங்குள்ள தக்ஷினா கன்னடா மற்றும் உடுப்பி கம்பலா சமிதி அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது. மாநில சிறு மற்றும் நடுத்தர துறை அமைச்சர் ஆர்வி தேஷ்பாண்டே கூறுகையில், மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வருவதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறது. இந்த சட்டம் மாநில சட்ட வரம்புக்கு உட்பட்டு வடிவமைக்க வேண்டும் என்றார்.

இதேபோல் தமிழகத்தில் நடந்து வரும் போராட்டத்தை பார்த்து எருமை பந்தயத்துக்கு உள்ள தடையை நீக்க கோரி மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி போராட்டத்தை தொடங்கியுள்ளது. பாரம்பரியமான இந்த பந்தயம் புனேவில் விநாயக சதுர்த்தியை ஒட்டி நடைபெற்று வந்தது. இதற்கு 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் தங்களது கலாச்சார விளையாட்டுக்கு போராடி வரும் நிலையில், அசாம் மாநிலத்தில் போகாலி பிகு கொண்டாட்டத்தின் போது நடைபெறும் எருது சண்டை போட்டிக்கு அனுமதி கேட்டு போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.