சென்னை:

கே.சண்முகத்தை தலைமைச் செயலாளராகவும், கே.திரிபாதியை டிஜிபியாகவும் பரிந்துரைத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு பட்டியல் அனுப்பியுள்ளது.


நிர்வாக ரீதியில் தலைமை பதவிக்கான நியமன உத்தரவை கவர்னர் பிறப்பிப்பார். இந்நிலையில், ஐஏஎஸ் கே.சண்முகத்தை தலைமைச் செயலாளராகவும், ஐபிஎஸ் அதிகாரி ஜேகே.திரிபாதியை டிஜிபியாகவும் (சட்டம்-ஒழுங்கு) தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.

இருவரும் 1985-ம் ஆண்டு தமிழகத்தில் பணியை தொடங்கிய அதிகாரிகள் ஆவர்.

இவர்களை நியமனம் செய்து ஆளுநர் பிறப்பிக்கும் உத்தரவு எந்நேரமும் வரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது வீட்டு வசதித்துறை செயலாளராக இருக்கும் எஸ்.கிருஷ்ணன் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

இதன்மூலம் தமிழகத்தின் 46-வது தலைமைச் செயலாளராகிறார் சண்முகம். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார்.

இவரை விட 6 சீனியாரிட்டி அதிகாரிகள் இருந்தும், நிதித்துறை செயலாளராக நீண்ட காலம் இருந்ததால்,தலைமை செயலாளர் வாய்ப்பு சண்முகத்துக்கு வந்துள்ளது.

சேலம் மாவட்டம் வேலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், முதல் பட்டதாரி ஆவார்.

1985-ம் ஆண்டு தஞ்சை உதவி கலெக்டராக பணியை தொடங்கினார். அதன்பின்னர், சிவகங்கை, புதுக்கோட்டை கலெக்டராகவும், பல்வேறு முக்கிய துறைகளிலும் பொறுப்பு வகித்துள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் முதல் நிதித்துறை செயலாளராக இருக்கும் சண்முகம், மாநிலத்தின் நிதி நெருக்கடியை சமாளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 9 பட்ஜெட்களையும்,2 இடைக்கால பட்ஜெட்களையும் தாக்கல் செய்திருக்கிறார்.

தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட இருக்கும் திரிபாதி ஒடிசாவைச் சேர்ந்தவர். கடந்த 30 ஆண்டுகளில் போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
தற்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரன் இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார்.