மதுரை: மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார்.

பிப்ரவரி 1ந்தேதி நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், ரூ. 2.40 லட்சம் கோடி  ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதில்,  தமிழ்நாட்டில் 9 புதிய ரயில் வழித்தடம் மற்றும்  ரயில்பாதைகள் விரிவுபடுத்த  ரூ.1057 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார்.

இது அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மத்திய பட்ஜெட் வெளியிடப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று காலையில் தான் ரயில் வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய பிங்க் புக் வெளியிடப்பட்டது.

தமிழகத்தின் புதிய லைன் திட்டங்களுக்கு இதுவரை வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து நான் விமர்சித்து வந்துள்ளேன். புதிய லைன் திட்டங்களான திண்டிவனம் -செஞ்சி- திருவண்ணாமலை திட்டத்துக்கும், அத்திப்பட்டு – புத்தூர், சென்னை கடற்கரை முதல் மகாபலிபுரம் வழியாக கடலூர் வரையான புதிய லைன் திட்டத்திற்கும், ஈரோடு-பழனி திட்டத்துக்கும் சேர்த்து இந்த ஆண்டு 1057 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது எங்களின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். ஆனாலும் இந்த தொகை திட்டங்களை முடிக்க போதுமானதல்ல.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஆனால் போதுமான நிதி ஒதுக்கப்படாமல் இருந்த மதுரை- அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி திட்டத்துக்கு 114 கோடியும் திண்டிவனம் நகரிக்கு 200 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருப்பெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை கூடுவாஞ்சேரி புதிய ரயில் திட்டத்துக்கும் 864 கோடிக்கு 58 கோடியும் ,மொரப்பூர்- தர்மபுரி புதிய லைனுக்கு 100 கோடியும், ராமேஸ்வரம்- தனுஷ்கோடிக்கு 386 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டுகளைக் காட்டிலும் சற்று கூடுதல் என்ற போதிலும் திட்டத்தை விரைந்து முடிக்க போதுமான நிதி கிடையாது.

தேசிய அடித்தள கட்டுமான திட்டமும், தேசிய ரயில் வளர்ச்சி திட்டமும் பற்றி எந்த பேச்சும் கிடையாது. ரயில்வே சரக்கு போக்குவரத்து பங்கு 45 சதமானம் அதிகரிக்கப்படும். சரக்கு வண்டிகளின் சராசரி வேகம் மணிக்கு 25 கிலோமீட்டரில்இருந்து 50 கிலோமீட்டர் ஆக உயர்த்தப்படும். பயணி வண்டிகளின் வேகம் 180 கிலோமீட்டர் ஆக அதிகரிக்கப் படும். ஆகவே அதற்காக ரயில் வளர்ச்சி திட்டங்கள் போடப்பட்டன .

தேசிய அடித்தள கட்டுமான திட்டம் ஐந்தாண்டுகளில் 14 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்றும் தேசிய ரயில் வளர்ச்சி திட்டம்2021 முதல் 2051 வரை 38.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் மேற்கண்ட லட்சியங்கள் நிறைவேறும் என்று பெரும் திட்டங்களை அறிவித்த மோடி அரசு இப்போது அந்தத் திட்டங்களை கைவிட்டு விட்டது. அதைப்பற்றி எந்த பேச்சும் பொருளாதார ஆய்வு அறிக்கையிலோ அல்லது பட்ஜெட்டில் ஒதுக்கீடோ எதுவும் இல்லை.

வெற்று அறிவிப்பும், பிரமாண்ட தோற்றத்தை உருவாக்கும் அறிவிப்பும் செய்வதே இந்த அரசின் தொடர் வாடிக்கை. அதன் தமிழ்நாட்டிற்கான ரயில் வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளன. ரயில் வளர்ச்சி என்பது தேச வளர்ச்சி. வேலை வாய்ப்பு வளர்ச்சியாகும் அதற்கு போடப்பட்ட திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளது,

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.