சென்னை: மங்கிபாக்ஸ் எனப்படும் குரங்கு வைரஸ் தொற்று குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு மருத்துவத்துறை செயலாளர் அவசர கடிதம் எழுதி உள்ளார்.

ஆப்பிரிக்காவில் காணப்படும் குரங்கு வைரஸ் (மங்கிபாக்ஸ்) எனப்படும் தொற்றுநோய் தற்போது உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்த வைரஸ் முதன் முதலில் 1958ஆம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்டது.  தொடர்ந்து, 1970ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் முதல்முறையாக  மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு  கண்டறியப்பட்டது. தற்போது இந்த வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. இதையடுத்து இந்தியாவிலும் மங்கி பாக்ஸ் தொற்று பரவல் தொடர்பாக கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் குரங்கு காய்ச்சல் பரவவில்லை என்றும், எனவே மக்கள் யாரும் இது குறித்து அச்சப்பட வேண்டியதில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். அதைத் தொடர்ந்து, குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளுக்கு கடந்த 21 நாட்களில் சென்று வந்தவர்கள் தகவல் தர வேண்டும் என பொதுசுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு மருத்துவத்துறை செயலாளர் அவசர கடிதம் எழுதி உள்ளார். அதில்,  வெளிநாட்டில் குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனே தகவல் தரவேண்டும். குரங்கு அம்மை பாதிப்பு என சந்தேகத்திற்கிடமான அனைத்து நோயாளிகளும் தனிமைப்படுத்தப்பட வேண்டும். குரங்கு அம்மைக்கான அறிகுறி என சந்தேகம் இருந்தால் அவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் புனேவுக்கு ஆய்வுக்காக அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.