சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விரைவில் ஆன்லைன் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என  மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.  மருத்துவ கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஓரிரு நாட்களில் தொடங்கும் என தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டு கடந்த வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகின. 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த 7-ம் தேதி வெளியான நிலையில், இதையடுத்து, மருத்துவப்படிப்புக்கான விண்ணப்பம், கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என மாணாக்கர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. .  ஆனால்,  இதுவரை மருத்துவக் கல்வி இயக்குநரகம் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய  மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள், நீட் தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெற்ற 67,000 மாணவர்களின் முழு விவரங்களை தேசிய தேர்வு முகமை இதுவரை தராததால், கலந்தாய்வுக்கான பணிகள் தாமதமாகி வருகிறது என்று தெரிவித்தனர். மேலும், மருத்துவ படிப்புக்கான  ஆன்லைன் விண்ணப்ப பதிவை ஓரிரு நாட்களில் தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அரசின் அனுமதியைப் பெற்று விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தனர்.

மேலும் கலந்தாய்வை ஆன்லைனில் நடத்துவதற்கும், நேரடியாக நடத்துவதற்கும் தயாராக இருப்பதாகவும், அரசு எப்படி நடத்த வேண்டும் என்று உத்தரவிடுகிறதோ, அந்த முறையில் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.