செனனை: 7வயது சிறுவனை கோயில் பூசாரியாக  நியமித்துள்ள அறநிலையத்துறையின் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அறநிலையத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் குல தெய்வமான கெத்தை அம்மன் கோவிலின் பூசாரியாக 7 வயது சிறுவனை அறநிலையத்துறை நியமித்து உள்ளது. இதை எதிர்த்து,  நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன் என்பவர் செனனை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுவில், நீலகிரி மாவட்டம் நெடுக்காட்டு கிராமத்தில் படுகர் இன மக்களின் குல தெய்வமான கெத்தை அம்மன் கோவிலில் பூஜை உள்ளிட்ட விழாக்களை அந்த இன மக்களே செய்து வந்தனர். ஆனால், அந்த கோவிலை  1994ஆம் ஆண்டு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து வருமானத்தை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், அந்த கோயிலின் பூசாரியாக, அதே கிராமத்தை சேர்ந்த இரண்டாம் வகுப்பு படித்த 7 வயது சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். அந்த கோவில் நடைமுறைபடி, பூசாரியாக நியமிக்கப்படுபவர்கள்  பள்ளி செல்ல முடியாது என்றும், உணவை அவர்களே சமைத்து சாப்பிடுவது, கோவில் பசுக்களின் பாலை கறந்து நெய் எடுத்து விளக்குகளுக்குப் பயன்படுத்துவது போன்றவை செய்ய வேண்டும். இதனால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. 7வயது சிறுவனை கோவில் பூசாரியாக நியமிக்கப்பட்டு உள்ளதால் அவரது படிப்பு பாழாகிறது. மேலும் இது குழந்தை தொழிலாளர் சட்டத்துக்கு எதிரானது. இது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அதிகாரிக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீலகிரி கல்வித் துறை அதிகாரி சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், கெத்தை அம்மன் கோயிலுக்கு பல நூற்றாண்டுகளாக 5 முதல் 14 வயது வரையுள்ள சிறுவர்களைப் பூசாரியாக நியமித்து வருகின்றனர் என்று தெரிவித்தார். பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் இந்த சடங்குகளை உடைக்க முடியாது என்றும், சிறுவனுக்கு தொடர்ந்து கல்வி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைப்பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கிற்கு இந்த சமய அறநிலையத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.