சென்னை: வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ் விலங்குகள் நல காப்பகங்களை பராமரிக்க தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக   தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம், கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்த வாரியத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ் கைவிடப்பட்டு மீட்கப்பட்ட, ஆதரவற்ற மற்றும் காயமடைந்த விலங்குகளுக்காக மாநிலம் முழுவதும் 6 விலங்குகள் நல காப்பகங்களை நிறுவி வருகிறது.

இந்த காப்பகங்களை மனிதாபிமான அடிப்படையில் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்திட ஏதுவாக, தகுதியும் அனுபவமும் வாய்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், விலங்குகள் நல அமைப்புகள் ஆகியவற்றிடம் இருந்து, காப்பகங்களின் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தினை மேற்கொள்ள ஏதுவாக தகுதியுடைய நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் (Expression of Willingness) வரவேற்கப்படுகிறது.

விரிவான தகவல் மற்றும் விண்ணப்ப படிவம் வாரியத்தின் www.tnawb.tn.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தேவையான இணைப்புகள் 10.3.2026 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பப்பட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.