சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், அதற்கான சுற்றுச்சூழல் அனுமதி தமிழ்நாடு சுற்றுச் சூழல் ஆணையம் வழங்கி உள்ளது.

ஏற்கனவே சென்னை இசிஆரில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்ட அனுமதி அளித்த நிலையில், தற்போது திருச்சி, மதுரையில் அமைய உள்ள  டைடல் பூங்கா கட்டுமானத்துக்கும் அனுமதி வழங்கி உள்ளது.

2024ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைவையின்  பட்ஜெட் உரையின்போது, திருச்சி மற்றும் மதுரையில் டைடல் பூங்கா நிறுவப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து மதுரை மற்றும்,  திருச்சியில் டைடல் பூங்காவை கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.

திருச்சி  டைடல் பூங்காவானது, திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்ற இடத்தில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகே டைடல் பூங்கா 14.16 ஏக்கரில் 5.58 லட்சம் சதுர அடியில் ரூ.315 கோடியில்  6 தளங்களுடன் அமைய உள்ளது.

அதுபோல,  மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே ரூ.289 கோடியில் டைடல் பார்க் அமைகிறது. இதன் மூலம் 5,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த  டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக சுற்றுச்சூழல் அனுமதிகோரி தமிழக அரசிடம் டைடல் லிமிடெட் நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது. இந்த நிலையில் மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக டைடல் பூங்காவின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் மூலம், மதுரை, திருச்சி சுற்று வட்டார மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.